அரசியல்

’இந்த வழக்கை வைத்துதான் எடப்பாடியை மிரட்டுகிறது பா.ஜ.க’- அடித்துச் சொல்லும் வேல்முருகன் !

பொருளாதார வீழ்ச்சி, வேலையின்மை, மெகா ஊழல்கள் இவற்றைத் திசைதிருப்பவே குடியுரிமைச் சட்ட திருத்தத்தை பா.ஜ.க கையிலெடுத்துள்ளது என தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் குற்றம்சாட்டியுள்ளார்.

’இந்த வழக்கை வைத்துதான் எடப்பாடியை மிரட்டுகிறது பா.ஜ.க’-  அடித்துச் சொல்லும் வேல்முருகன் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

அ.தி.மு.க அரசைக் கவிழ்க்கக்கூடிய 11 எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்க வழக்குத் தீர்ப்பு வெளிவராதபடி மோடி அரசு பார்த்துக் கொள்வது தான் அ.தி.மு.க பா.ஜ.க.வுக்கு அடிபணிய காரணம் என தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''இந்தியக் குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதா நேற்று (11.11.2019) இரவு நாடாளுமன்றத்தில் நிறைவேறியது. இது பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளிலிருந்து மதத் துன்புறுத்தல் காரணமாக இந்தியாவுக்கு வந்த முஸ்லிம் அல்லாதவர்களுக்கு, அதாவது இந்துக்கள், கிறிஸ்தவர்கள், பவுத்தர்கள், சமணர்கள், பார்சிகள் ஆகியோருக்கு இந்திய குடியுரிமை கிடைக்க வகை செய்கிறது.

இப்படி முஸ்லிம்களைப் பாகுபடுத்துவது இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கே எதிரானதாகும். அதே சமயம், மதத் துன்புறுத்தலுக்கு ஆளாகி இடம்பெயர்ந்தவர்கள் பட்டியலில், இலங்கையின் சிங்கள-பௌத்த பேரினவாதத்தால் பாதிக்கப்பட்டு அகதிகளாக இந்தியாவில் இருக்கும், இந்துக்களான ஈழத் தமிழர்கள் சேர்க்கப்படாதது, இன ரீதியில் தமிழர்களுக்குச் செய்யும் வஞ்சகம் மற்றும் இரண்டகமாகும்.

’இந்த வழக்கை வைத்துதான் எடப்பாடியை மிரட்டுகிறது பா.ஜ.க’-  அடித்துச் சொல்லும் வேல்முருகன் !

நாம் கேட்பது, இந்துக்கள் என்பவர்கள் இந்தியாவைப் பிறப்பிடமாகக் கொண்டவர்கள். அப்படியென்றால் தீபத்தியர்களுக்கு இந்தியக் குடியுரிமை கொடுத்ததெப்படி?

இலங்கையில் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் என ஈழத் தமிழர்கள் மீதான பவுத்த சிங்களக் காடையர்களின் தொடர் தாக்குதலால் 12 லட்சம் பேர் இடம்பெயர்ந்து உலகம் முழுவதும் 40 நாடுகளில் வாழ்கிறார்கள். அந்த நாடுகளிலெல்லாம் அவர்களுக்குக் குடியுரிமை கொடுத்திருக்கிறார்கள். கனடாவிலே நாடாளுமன்ற உறுப்பினர்களாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். நார்வேயிலே தமிழர் மாநகர முதல்வராகத் தேர்வு செய்யப்பட்டார்.

இப்படி தமிழர்களை ஆட்சிபீடத்தில் கூட அமர்த்தியிருக்கின்றன அந்நாடுகள். ஆனால் இந்தியாவில்தான், அதுவும் அவர்களின் தொப்புள்கொடி உறவுள்ள தமிழ்நாட்டில் கூட குடியுரிமையற்றவர்களாக இருக்கிறார்கள்.

1983க்குப் பிறகு தமிழ்நாட்டில் மட்டும் இரண்டரை லட்சம் இந்து தமிழர்கள் குடியுரிமையற்றவர்களாக இருக்கிறார்கள். அவர்களில் ஒரு லட்சம் பேர் அகதி முகாம்களில் இருக்கிறார்கள். ஆக 37 ஆண்டுகளாக இந்தியாவில் வாழும் இவர்களுக்கெல்லாம் இந்தியக் குடியுரிமை வழங்கவேண்டும் என்பதுதான் அவர்களது கோரிக்கை.

ஆனால் பா.ஜ.க மோடி அரசு மத ரீதியாக முஸ்லிம்களுக்கு குடியுரிமை மறுக்கிறது என்றால் ஈழத் தமிழர்களுக்கு இன ரீதியாக குடியுரிமை மறுக்கிறது. இன ரீதியாக மறுப்பதை மறைக்க வேறு சொல்லைப் பயன்படுத்துகிறது. அதாவது ஈழத் தமிழர்களை “சட்டவிரோதமாக” வந்தவர்கள் என்கிறது.

இதை இந்திய உள்துறை இணை அமைச்சர் நித்தியானந்த ராய் உறுதிப்படுத்துகிறார்: “இந்திய குடியுரிமை என்பது இந்தியக் குடியுரிமைச் சட்டம் 1955 மற்றும் குடியுரிமை விதிகள் 2009இன் அடிப்படையில் வழங்கப்படுகின்றன. அந்த சட்டத்தின் பிரிவு 5இன்படி பதிவு செய்துகொண்ட அயல்நாட்டவர் எவரும் இந்திய குடியுரிமை பெற முடியும். அந்த சட்டத்தின் பிரிவு 6இன்படி இயல்புரிமை (naturalisation) அடிப்படையிலும் குடியுரிமையைப் பெற முடியும். “சட்டவிரோதமாக” குடிபெயர்ந்தவர்கள் குடியுரிமையைப் பெற முடியாது.”

தமிழ்நாட்டிற்குள் வரும் ஈழத் தமிழர்களை “சட்டவிரோத” குடியேறிகள் என்று சொல்ல ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க.வினர் யார்? இந்தியாவோ, தமிழ்நாடோ அவர்களின் நாடில்லை. தேர்தல் மூலம் வெறும் 35 விழுக்காடு வாக்குகளையே பெற்று ஆட்சிபீடத்தில் அமர்ந்திருப்பவர்களுக்கு “சட்டவிரோத” குடியேறிகள் என்ற வார்த்தையை உபயோகிக்க அருகதையே கிடையாது.

ஆனால் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க மோடி அரசு அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக, பன்னாட்டு மனித உரிமை சாசனத்திற்கு எதிராக, ஏன் மனிதாபிமானத்திற்கே எதிராக முஸ்லிம்களை மத ரீதியாகவும் தமிழர்களை இன ரீதியாகவும் ஒடுக்குகிறது; இதனால் இந்தியாவையும் பிளவையே சந்திக்கத் தூண்டுகிறது. அப்படி பிளவைச் சந்தித்தால் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க அமைப்பே இருக்காது; எந்த ஆட்சி பீடமும் கிடைக்காது.

’இந்த வழக்கை வைத்துதான் எடப்பாடியை மிரட்டுகிறது பா.ஜ.க’-  அடித்துச் சொல்லும் வேல்முருகன் !

நாட்டில் எவ்வளவோ பிரச்சனைகள் உள்ளன. அவற்றையெல்லாம் தீர்க்க முடியாது தோல்வி கண்டுள்ளது ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க மோடி அரசு. அதிலிருந்து மக்கள் கவனத்தை திசைதிருப்பவே, மடைமாற்றவே இந்தக் குடியுரிமைச் சட்ட திருத்தத்தைக் கையிலெடுத்துள்ளது ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க மோடி அரசு.

பா.ஜ.க.வின் இந்த வேலைக்கு அ.தி.மு.க.வும் எப்போதும் போல் தன் ஆதரவைத் தெரிவிக்கிறது. அதற்குக் காரணம், இந்த அ.தி.மு.க அரசு என்பதே பா.ஜ.க.வின் பினாமி அரசு என்பதுதான் உண்மை. அதைவிடவும் அனர்த்தம், 11 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பு வெளியான அடுத்த நிமிடமே கவிழக்கூடிய அரசை, தீர்ப்பு வெளிவராமல் தடுத்துவைத்து காப்பாற்றி வருவதே பா.ஜ.க மோடி அரசு தான்'' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories