‘‘தூக்கைத் தூக்கிலிடுங்கள்”
‘நிராயுதபாணிகளுக்காகத் துடிக்கும் ஓர் இதயம்’ என்று உச்சநீதிமன்ற நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யரைப் பற்றி, உச்சநீதிமன்ற நீதிபதி சின்னப்பரெட்டி எழுதினார். அத்தகைய இதயத்தைக் கொண்ட வி.ஆர்.கிருஷ்ணய்யர் அவர்கள் தனது 100 வயதிலும் தூக்குத் தண்டனைக்கு எதிரான தனது குரலை ஒலித்துக் கொண்டே இருந்தார்.
பேரறிவாளன் மிக நீண்ட நாட்களாக சிறையில் இருந்து வருவதைச் சுட்டிக்காட்டி பொதுவெளியில், தூக்குத் தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று குரல் கொடுத்தார் அவர். ‘தூக்கைத் தூக்கிலிடுங்கள்’ என்பது அவரது புகழ் பெற்ற சொற்றொடர் ஆகும். அதற்கான காலம் கனிந்து வருவதாகத் தெரிகிறது.
‘மரண தண்டனைக் கைதிகளுக்குத் தூக்கு மூலமாக தண்டனை நிறைவேற்றும் நடைமுறையை மறு ஆய்வு செய்ய நிபுணர் குழு ஒன்றை அமைக்கத் திட்டமிட்டுள்ளோம்’ என்று உச்சநீதிமன்றத்தில் ஒன்றிய அரசு சார்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
டெல்லி உச்ச நீதிமன்றத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டில் வழக்கறிஞர் ரிஷி மல்ஹோத்ரா மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். ‘‘சட்ட ஆணையத்தின் 187வது அறிக்கையில் தூக்கு தண்டனையை ரத்து செய்து, அதற்கு பதிலாக மின்சாரம், துப்பாக்கிச் சூடு அல்லது மரண ஊசி மூலம் மரண தண்டனை விதிக்கும் நாடுகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது.
ஒரு குற்றவாளியை தூக்கிலிடும் போது அவர் கடுமையான சித்திரவதையையும், வலியையும் அனுபவிப்பதாக அந்த அறிக்கை கூறுகிறது. எனவே, தூக்கு தண்டனையை ஒழித்து, அதற்கு பதிலாக மரண ஊசி அல்லது மின்சாரம் தாக்குதல் போன்ற மாற்று முறைகளை கடைப்பிடிக்க வேண்டும்” என்று அதில் சொல்லி இருந்தார்.
இந்த வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் மற்றும் நீதிபதி ஜே.பி.பார்திவாலா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஒன்றிய அரசு தரப்பில் கருத்து கேட்டதற்கு ‘‘தூக்கு பொருத்தமான தண்டனையா? அது வலியற்ற முறையா என்பதை ஆராய நிபுணர் குழுவை அமைக்க உள்ளோம்” என்று உறுதி அளித்துள்ளார்கள். அதனை அரசு செய்யவில்லை என்றால் நீதிமன்றம் அத்தகைய குழு ஒன்றை அமைக்கும் என்றும் நீதிபதிகள் கூறியிருக்கிறார்கள்.
ஏற்கனவே இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தூக்கு தண்டனையின் போது ஏற்படும் பாதிப்பு மற்றும் வலி குறித்து ஏதேனும் தரவு அல்லது ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளதா? அது மிகவும் பொருத்தமான முறையா என்பது குறித்த விவரங்களை அளிக்குமாறு ஒன்றிய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்திய தண்டனைச் சட்டத்தின் உச்சமாக மரண தண்டனை விதிக்கப்பட்டு வருகிறது. “இறக்கும் வரை கயிற்றில் தொங்குதல்” என்பது அதிகபட்சத் தண்டனையாகும். இந்தியாவில் கடைசியாக டெல்லி நிர்பயா கூட்டு பலாத்காரம் மற்றும் கொலை வழக்கில் 4 குற்றவாளிகளுக்கு 2020 ஆம் ஆண்டு திகார் சிறையில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.
பி.பி.சி. செய்தி நிறுவனம் சமீபத்தில் ஒரு கட்டுரையை வெளியிட்டு இருந்தது. 25 ஆண்டுகளுக்கு முன் கொலைக் குற்றம் சாட்டப்பட்ட ஒரு சிறுவனை, 18 வயது ஆனவர் என்று தவறுதலாகக் கருதி அவருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டதை வைத்து அந்தக் கட்டுரை எழுதப்பட்டு இருந்தது.
சம்பவம் நடந்தபோது, ‘நான் சிறுவன்தான்’ என்பதை நிரூபித்தது அந்த சிறுவன் தரப்பு. இதனை ஏற்றுக் கொண்டு உச்சநீதிமன்றம் அவரது தூக்குத் தண்டனையை கடந்த மார்ச் மாதம் ரத்து செய்துள்ளது. மரண தண்டனையில் இருந்து தப்பிய அவரது பெயர் நிரனராம் சேதன்ராம் என்பது ஆகும். இப்போது அவருக்கு 41 வயது. தனது வாழ்நாளில் 28 ஆண்டுகள், ஆறு மாதங்கள், 23 நாட்களை சிறையில் கழித்துள்ளார். மொத்தம் 10,431 நாட்கள்.
1994 ஆம் ஆண்டு புனே நகரில் நடந்த குற்றச் சம்பவத்துக்காக இவருக்கு 1998 ஆம் ஆண்டு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இவருக்கு 20 வயது என்று காவல் துறை சொன்னதால் மரண தண்டனை விதிக்கப்பட்டது. மூன்று நீதிமன்றங்கள், எண்ணற்ற விசாரணைகள், மாறுதல் சட்டங்கள், மேல்முறையீடுகள், கருணை மனு, வயது நிர்ணயச் சோதனைகள் மற்றும் அவரது பிறந்த தேதித் தாள்களைத் தேடுதல் என 30 ஆண்டுகளாக நீடித்த நிரனராமின் துன்பத்தை கடந்த மார்ச் மாதத்தில் இந்திய உச்ச நீதிமன்றம் முடிவுக்குக் கொண்டு வந்தது.
குற்றம் நடந்தபோது நிரனராமிற்கு 12 வயது 6 மாதங்கள் மட்டுமே நடந்துவந்தது என்றும் அவர் சிறார் என்றும் நீதிபதிகள் முடிவு செய்தனர். இந்திய சட்டங்களின்படி, சிறார்களுக்கு மரண தண்டனை விதிக்க முடியாது. அவர்களுக்கு அதிகபட்ச தண்டனையாக மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்க முடியும். அப்படி விதித்திருந்தால் 1994 கைதான அவர், 1998 தீர்ப்பளிக்கப்பட்ட அன்றே விடுதலையாகி இருக்கவும் கூடும். ஆனால் பிறந்த தேதியைத் தவறாகக் கொடுத்ததன் மூலம் 2023 வரை 28 ஆண்டுகள் சிறையில் வைக்கப்பட்டிருந்தார். தான் பிறந்த தேதியை அவரால் ஒரு வேளை நிரூபிக்க முடியாமல் போயிருந்தால் அவர் தூக்கிலிடப்பட்டு இருப்பார். அதற்கான தண்டனையை யாருக்கு வழங்கி இருக்க முடியும்?
பெயரை நாராயணன் என்றும், பிறந்த தேதியை கூட்டியும் போட்டு இருந்தார்கள்.
‘‘நிரனராமுவின் பெயரையும் மாற்றி, அவர் பிறந்த தேதியையும் தவறாக பதிவு செய்திருந்திருக்கிறார்கள். நிரனராமுக்கு பிறப்புச் சான்றிதழ் இல்லை. பொதுவாக கிராமங்களில் அதனை சரியாகப் பெறுவது இல்லை. அவரது கிராமப் பள்ளியில் உள்ள பழைய பதிவேட்டில் அவரது பிறந்த தேதி 1 பிப்ரவரி 1982 என குறிப்பிடப்பட்டிருந்தது. இறுதியில் இதுதான் அவரை காப்பாற்றியது. அவர் பள்ளியில் சேர்ந்த மற்றும் வெளியேறிய தேதிகளுடன் கூடிய பள்ளி மாற்றுச் சான்றிதழும், நாராயணனும் நிரனராமும் ஒரே நபர்தான் என்பதற்கு ஆதாரமாக கிராமசபைத் தலைவரின் சான்றிதழும் இந்த வழக்கில் முக்கிய பங்காற்றியது” என்று எழுதுகிறார் பி.பி.சி. செய்தியாளர்.
தான் பிறந்த தேதியை அவரால் ஒரு வேளை நிரூபிக்க முடியாமல் போயிருந்தால் அவர் தூக்கிலிடப்பட்டு இருப்பார். அதற்கான தண்டனையை யாருக்கு வழங்கி இருக்க முடியும்?
இதற்காகத்தான் வி.ஆர்.கிருஷ்ணய்யர் சொல்கிறார்: ‘தூக்கைத் தூக்கிலிடுங்கள்’ என்று!