தமிழ்நாட்டில் பணிபுரியும் 100 நாள் வேலைத் திட்ட ஊழியர்களுக்கு ஊதியம் வழங்குவதற்கான நிதியைக் கிடப்பில் போட்டுள்ள ஒன்றிய பா.ஜ.க.விற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து, அவர் தனது X சமூகவலைதளப் பக்கத்தில், “காந்தியைப் பிடிக்காதவர்களுக்கு அவர் பெயரிலான நூறு நாள் வேலைத் திட்டத்தையும் பிடிக்கவில்லை.
இந்தியக் கிராமப்புறப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக, இரத்த ஓட்டமாக யுபிஏ அரசால் வளர்த்தெடுக்கப்பட்ட ‘மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டம்’ மீது சம்மட்டி கொண்டு அடித்து ஒரேயடியாக ஒழித்துக்கட்டும் வேலையில் இறங்கியிருக்கிறது இரக்கமற்ற பா.ஜ.க. அரசு!
உங்களுக்கு 'வேண்டப்பட்ட' கார்ப்பரேட்டுகள் என்றால் பல லட்சம் கோடி ரூபாய்க் கடனைக் கூட ஒரே கையெழுத்தில் தள்ளுபடி செய்கிறீர்களே? வேகாத வெயிலில் உடலை வருத்தி, வியர்வை சிந்தி உழைத்த ஏழைகளின் சம்பளப் பணத்தை விடுவிக்க மட்டும் ஏன் பணமில்லை? பணமில்லையா அல்லது மனமில்லையா?
கழக உடன்பிறப்புகளும், ஏழை மக்களும் எழுப்பும் குரல் டெல்லியை எட்டட்டும்! இரக்கமற்ற பா.ஜ.க அரசின் மனம் இரங்கட்டும்!” என பதிவிட்டுள்ளார்.
இதற்கிடையே பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள தமிழ்நாடு வருகை தரும் ஒன்றிய அமைச்சர்கள், நிதி வழங்குவது குறித்தோ அல்லது மக்களுக்கான நலத்திட்டங்கள் குறித்தோ பேசாமல், வெறும் வெறுப்பு பேச்சுகளை வெளிப்படுத்தி செல்கின்றனர்.
இதுபோன்ற செயல்கள் தொடர்ந்து வருவதால், மக்கள் பா.ஜ.க.வின் செயல்பாடுகள் மீது கடும் அதிருப்தியடைந்து வருகின்றனர்.