நீட் தேர்விலிருந்து விலக்கு கோரிய தமிழக சட்டப்பேரவைத் தீர்மானத்தின் நிலை என்ன என சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பினார் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின்.
சட்டப்பேரவையில் தேசிய கல்விக் கொள்கை குறித்த சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானத்தைக் கொண்டுவந்து பேசிய மு.க.ஸ்டாலின், “தமிழ்நாடு ‘சமூக நீதியின் தொட்டில்’ அதனை நீர்த்துப்போகச் செய்யும் வகையில் ஆளும் மத்திய, மாநில அரசுகள் ஈடுபடுகின்றன; தி.மு.கழகம் ஒருக்காலும் இதனை அனுமதிக்காது” எனச் சூளுரைத்தார்.
மேலும் பேசிய அவர், “மாநில உரிமைகளைப் பறிக்கும் வகையில் புதிய தேசிய கல்விக் கொள்கை கொண்டுவரப்பட்டுள்ளது. நீட் தேர்வால் மாணவர்களுக்கு மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது. நீட் தேர்வால் தமிழக மாணவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் நிலை தொடர்கிறது. தமிழகத்தில் கடும் எதிர்ப்பையும் மீறி நீட் தேர்வு திணிக்கப்படுகிறது. தமிழக அரசின் நீட் விலக்கு உள்ளிட்ட மசோதாக்கள் மத்திய அரசின் அலமாரிகளில் தூங்குகின்றன.
அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நீட் தேர்வு குறித்தும், முன்னேறிய வகுப்பினருக்கான 10% இட ஒதுக்கீடு குறித்தும் விவாதிக்க வேண்டும். தமிழக மருத்துவ மாணவர்களுக்கென தனிப் பட்டியலை தமிழக அரசு வெளியிட வேண்டும். நீட் முடிவுகள் வெளியாகி ஒரு மாதம் ஆகியும் தரவரிசைப் பட்டியல் வெளிவராததன் பின்னணியில் இருக்கும் சதி என்ன?” எனக் கேள்வி எழுப்பினார்.
முன்னேறிய வகுப்பினருக்கான 10% இட ஒதுக்கீடு குறித்தும் நீட் தேர்வு குறித்தும் தமிழக அரசின் நிலைப்பாடு என்ன என்பதை விளக்கவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்.