இந்தியாவில் பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் பொது போக்குவரத்துகளில் ரயில் ஒன்றாக திகழ்கிறது. தினசரி கோடிக்கணக்கான மக்கள் ரயில் மூலம் பயணம் மேற்கொள்கின்றனர்.இந்நிலையில் இன்று முதல் விரைவு ரயில்களின் டிக்கெட் கட்டணத்தை உயர்த்தப்படும் என இந்திய ரயில்வே ஏற்கனவே அறிவித்திருந்தது.
அதன்படி, ஏசி அல்லாத விரைவு ரயில்களில் ஒரு கிலோமீட்டருக்கு 1 பைசா வீதம் டிக்கெட் கட்டணம் உயர்த்தப்பட இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஏசி அல்லாத மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்களுக்கான கட்டணம் கி.மீ.க்கு ₹0.01 அதிகரிக்கும், ஏசி வகுப்பு ரயில்களுக்கு, கி.மீ.க்கு ₹0.02 அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 500 கி.மீ வரையிலான இரண்டாம் வகுப்பு டிக்கெட்டுகளுக்கான கட்டணத்தில் எந்த மாற்றமும் இல்லை. இருப்பினும், 500 கி.மீ.க்கு மேல் செல்லும் பயணங்களுக்கு, கி.மீ.க்கு ₹0.005 வரை கட்டண உயர்வு இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
அதன்படி, 501 முதல் ஆயிரத்து 500 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஐந்து ரூபாயும், ஆயிரத்து 501 முதல் 2 ஆயிரத்து 500 கிலோ மீட்டர் தூரத்திற்கு 10 ரூபாயும், 2 ஆயிரத்து 501 முதல் 3 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்திற்கு 15 ரூபாயும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த ரயில்களில் படுக்கை வசதி வகுப்பு மற்றும் முதல் வகுப்பில் பயணம் செய்வதாக இருந்தால் ஒரு கிலோ மீட்டருக்கு அரை பைசா அதிகரிக்கப்பட்டுள்ளது.
ரயில் கட்டண உயர்வுக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. ரயில்கள் மற்றும் ரயில் நிலைங்களில் அடிப்படை வசதிகளை செய்து தராமல் ரயில் கட்டணத்தை ஏற்றுவது நடுத்தர மக்களை பாதிக்கும் என்ற விமர்சனம் எழுந்துள்ளது.