மேற்குவங்க மாநிலத்தில் பூர்வா மெடினிபூர் ரயில் நிலையம் உள்ளது. இங்கு ரயில்வே போலிஸார் கே.சுமதி என்பவர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது இவருக்கு எதிரே இருந்த நடைமேடையில் வாலிபர் ஒருவர் நின்றுகொண்டிருந்தார். இவர் அங்கும் இங்கும் நடந்தவாரரே இருந்தார். இதையடுத்து இவர் நின்று கொண்டிருந்த நடைமேடையில் அடுத்த தண்டவாளத்தில் ரயில் ஒன்று வேகமாக வந்து கொண்டிருந்தது.
இதைப்பார்த்த அவர் உடனே நடைமேடையில் இருந்து கீழே குதித்து தண்டவாளத்தில் தலைவைத்துப் படுத்துக் கொண்டார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பெண் காவலர் சுமதி சற்றும் தாமதிக்காமல் நடைமேடையில் இருந்து கீழே குதித்து அந்த நபரைப் பிடித்து இழுத்து வெளியே கொண்டு வந்தார்.
அடுத்த நொடியே இவர்களைக் கடந்து வேகமாக ரயில் சென்றது. இந்த திக்திக் நிமிடம், வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதைப்பார்த்த பலரும் துணிச்சலுடன் செயல்பட்ட பெண் காவலர் சுமதிக்குப் பாராட்டி வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.