கர்நாடகா மாநிலம் துமகூரு பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் பாராமெடிக்கல் மருத்துவ படிப்பை படித்து வருகிறார். இவருக்கு பெங்களூரு கிரிநகரைச் சேர்ந்த புருஷோத்தம் என்பவர் ஒரு ஆண்டுக்கு முன்னர் அறிமுகமாகியுள்ளார். தொடர்ந்து இருவரும் அடிக்கடி பேசிவந்துள்ளனர்.
அப்போது அந்த இளைஞர் அந்த பெண்ணை தான் காதலிப்பதாக கூறியுள்ளார். அதனை அந்த பெண்ணும் ஏற்றுக்கொண்ட நிலையில், இருவரும் தொடர்ந்து செல்போனில் பேசி பழகி வந்துள்ளனர். அப்போது புருஷோத்தம் அந்த பெண்ணை சந்திக்க விரும்புவதாக கூறியுள்ளார்.
அதற்கு அவரும் சம்மதம் தெரிவித்த நிலையில், புருஷோத்தம் காதலியை பார்க்க துமகூரு பகுதிக்கு சென்றுள்ளார். அங்கு இருவரும் சந்தித்த நிலையில், காதலியின் விலை உயர்ந்த செல்போனை சில நாட்கள் தான் வைத்துக்கொள்வதாக கூறியுள்ளார். அதற்கு காதலியும் ஒப்புக்கொண்ட நிலையில், அவரின் போனை புருஷோத்தம் வாங்கிச்சென்றுள்ளார்.
அதனைத் தொடர்ந்து சில நாட்களுக்கு பின்னர் தனது செல்போனை திரும்ப தருமாறு அந்த பெண் கூற அதற்கு புருஷோத்தமும் ஒப்புக்கொண்டுள்ளார். மேலும், இந்த முறை காதலியை பெங்களூருவுக்கு வருமாறு அழைத்துள்ளார். அதன்படி அவரின் காதலியும் ஜூன் 6ஆம் தேதி பெங்களூரு வந்துள்ளார்.
அங்கு, தனது அறைக்கு வருமாறு புருஷோத்தம் காதலியை வற்புறுத்தி அழைத்துசென்றுள்ளார். அவரின் அறையில் புருஷோத்தமின் நண்பர் சேத்தன் என்பவரும் இருந்துள்ளார். அப்போது இருவரும் அந்த இளம்பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த குளிர்பானத்தை கொடுத்துள்ளார்.
அதனை குடித்த அந்தப்பெண் அரைமயக்கமடைந்த நிலையில் இருக்க, அவரை இருவரும் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளனர். ஆனால், அரைமயக்கத்தில் அந்த பெண் கூச்சலிட அக்கம் பக்கம் இருந்தவர்கள் அறையை உடைத்து அந்த பெண்ணை மீட்டுள்ளனர். தொடர்ந்து இது குறித்து காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில், அவர்கள் விரைந்து வந்து இருவரையும் கைது செய்தனர். இந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.