உத்தர பிரதேசம் மாநிலம் லக்னோவில் அமைந்துள்ளது மதியோன் என்ற பகுதி. இங்கு ஹர்ஷ் என்பவர் 'மகேஸ்வரி' என்ற நகை கடை ஒன்றை நடத்தி வருகிறார். இந்த சூழலில் கடந்த 30-ம் தேதி இரு சக்கர வாகனத்தில் 3 சிறுவர்கள் துப்பாக்கியுடன் நகை கடைக்குள் புகுந்தனர். இதனால் பயந்துபோன கடை உரிமையாளர் கத்தி கூச்சலிட்டுள்ளார்.
எனவே, தங்களுக்கு நகை வேண்டும், நகை கொடுத்தால் ஒன்றும் செய்ய மாட்டோம் அல்லது துப்பாக்கியால் சுட்டு விடுவோம் என்று சிறுவர்கள் மிரட்டவே, தனது அருகில் இருந்த அலாரம் பட்டனை அழுத்தியுள்ளார் ஹர்ஷ். இதனால் பயந்துபோன சிறுவர்கள் உடனே அங்கிருந்து தப்பித்து ஓடினர். இதையடுத்து இதுகுறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன்பேரில் விரைந்து வந்த அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். மேலும் கடையில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது அந்த சிறுவர்கள் யார் என்று அடையாளம் தெரியவந்தது. இதையடுத்து தொடர்ந்து தனிப்படை அமைத்து தேடி வந்த போலீசார், நேற்று அந்த மூன்று சிறுவர்களையும் அதிரடியாக கைது செய்தனர்.
மேலும் அவர்களிடம் இருந்த ஆயுதங்கள், நம்பர் பிளேட் இல்லாத வாகனத்தையும் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர்கள் மூன்று பேரும் 15,16 மற்றும் 17 வயது என்றும், அவர்களில் 2 பேர் நகை கடை அமைந்திருக்கும் மதியோன் என்ற பகுதியை சேர்ந்தவர்கள் என்றும், மற்றொருவருக்கு காத்ரா என்ற பகுதி என்றும் தெரியவந்தது.
மேலும் 9-ம் வகுப்பு மட்டுமே முடித்திருக்கும் இவர்கள், அவரது பெற்றோர்களிடம் வேலைக்கு செல்வதாக கூறி திருட்டு தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளனர். சிறு சிறு திருட்டு தொழில் செய்து வந்த இவர்கள் தற்போது நகை கடையை கொள்ளையடிக்க காரணத்தை கூறினர். அதாவது யாருமில்லாத தீவில் பிறந்தநாள் கொண்டாட சுமார் ரூ.25,000 பணம் தேவை பட்டுள்ளது. எனவே அவர்கள் நகைக்கடையை கொள்ளையடிக்க வந்தது தெரியவந்தது.
இருப்பினும் அவர்களிடம் துப்பாக்கி எப்படி வந்தது என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது அவர்கள் மூன்று பேரும் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் உள்ளனர். தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.