கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ஜெயின் பல்கலைக்கழகத்தில் இம்மாதம் 6ம் தேதி விழா ஒன்று நடந்துள்ளது. இதில் Mad Ads என்ற பெயரில் The Delroys Boys என்ற மாணவர் குழுவினர் மேடை நாடகம் ஒன்றை நடத்தியுள்ளனர்.
இந்த நாடகத்தில் அண்ணல் அம்பேத்கர், இடஒதுக்கீடு, பட்டியலின மக்களைக் கிண்டல் அடித்து வசனங்கள் பேசப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக பி.ஆர்.அம்பேத்கர் பெயரை பீர் அம்பேத்கர் என்று மாற்றியுள்ளனர். அதேபோன்று பட்டியலினத்தைச் சேர்ந்த ஆண்கள் உயர்சாதி பெண்களை எப்படி எல்லாம் காதலிக்க முயற்சி செய்கிறார்கள் என்று நடித்து அவமானப்படுத்தியுள்ளனர்.
அதே நேரம் இந்த நாடகத்தைப் பார்த்துக் கொண்டிருந்த ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கடும் எதிர்ப்புகளை தெரிவித்துள்ளனர். மேலும் இந்த நாடகத்தை இவர்கள் கல்லூரி நிர்வாகத்திடம் அரங்கேற்றிய பிறகுதான் விழாவில் நடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் இவ்வளவு கீழ்த்தரமாக இருக்கும் இந்த நாடகத்தை நடத்த எப்படி கல்லூரி நிர்வாகம் அனுமதி கொடுத்தது என சக மாணவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
மேலும் இந்த நாடகத்தின் வீடியோக்கள் சில இணையத்தில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து சமூக ஆர்வலர்கள் பலரும் கல்லூரி மீதும், மாணவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
அதோடு மகாராஷ்டிர மாநில காவல்துறை கண்காணிப்பாளரிடம் சட்டக் கல்லூரி மாணவர் அக்ஷய் என்பவர் அம்பேத்கரை அவமதித்து நாடகம் நடத்திய மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்துள்ளார். இப்படி நாடகத்தில் நடித்த மாணவர்கள் மீது பலரும் காவல்நிலையத்தில் புகார் அளித்து வருகின்றனர். இந்தநிலையில் இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதால் நாடகத்தில் நடித்த 6 மாணவர்களைக் கல்லூரி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளது.