மகாராஷ்டிர மாநிலம், கல்யாண் ரயில் நிலையம் அருகே கல்யாணி மேற்கு பகுதியில் 9 வயது சிறுமியின் சடலம் அரை நிர்வாண கோலத்தில் கிடந்துள்ளது. இதனை கண்ட அந்த பகுதியை சேர்ந்தவர்கள் இது குறித்து காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணையும் மேற்கொண்டனர். அப்போது சிறுமியின் பெற்றோரை அடையாளம் கண்டு அவர்களுக்கும் தகவல் கொடுத்தனர். அதோடு இதுகுறித்து தீவிரமாக விசாரித்து வந்தனர். அப்போது அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சியை ஆய்வு செய்தனர். அந்த சிசிடிவி காட்சியில் அதே பகுதியை சேர்ந்த சிறுவன் ஒருவன் இருந்துள்ளது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து சந்தேகத்தின் பேரில், 15 வயது சிறுவனை விசாரணை மேற்கொள்ள அவரது குடியிருப்பு பகுதிக்கு அதிகாரிகள் சென்றனர். அப்போது சிறுவனின் பதில் சந்தேகத்திற்குரிய வகையில் இருந்ததால் அவரிடம் கடுமையாக விசாரணை மேற்கொண்டனர். அப்போது பல திடுக்கிடும் தகவல்களை சிறுவன் கூறினார்.
அதாவது கடந்த சில நாட்களுக்கு முன்பு பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தைக்கும், குற்றம்சாட்டப்பட்ட சிறுவனுக்கும் ஒரு தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் சிறுமியின் தந்தை சிறுவனை தாக்கியுள்ளார். இதனால் கடும் கோபத்தில் இருந்த அந்த சிறுவன், அவரை பழிவாங்க எண்ணியுள்ளார். எனவே அவரது சிறு மகளை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்.
அதன்படி சம்பவத்தன்று சிறுமியை கடத்தி, ஆள் இல்லாத இடத்திற்கு கொண்டு சென்றுள்ளார். பின்னர் அங்கே வைத்து அவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும் தான் மறைத்து வைத்திருந்த பிளேடை கொண்டு அவரது கழுத்தை அறுத்துள்ளார். இவரது இந்த வாக்குமூலம் காவல்துறையினரை மட்டுமல்லாமல் அனைவரையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இதைத்தொடர்ந்து குற்றவாளி மீது பாலியல் வன்கொடுமை, கொலை, போக்ஸோ உள்ளிட்ட வழக்குகள் பதிவு செய்து கைது செய்யப்பட்டு மேலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தன்னை தாக்கியவரை பழி வாங்க வேண்டும் என்று எண்ணிய சிறுவன், அவரது 9 வயது மகளை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் மகாராஷ்டிராவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.