டெல்லியின் ஆனந்த் விஹார் பகுதியை சேர்ந்த தம்பதியினர் பிச்சை எடுத்து அதன்மூலம் வரும் வருமானத்தில் வாழ்ந்து வந்தனர். இந்த தம்பதிக்கு இரண்டரை வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. இந்த தம்பதி தங்கள் குழந்தைகளுடன் கடந்த சில நாட்களுக்கு முன் உத்தரபிரதேச மாநிலம் கவுசாம்பி பேருந்து நிலையத்திற்கு சென்றுள்ளனர்.
சம்பவதன்று அந்த தம்பதியின் இரண்டரை வயது குழந்தை அந்த பகுதியில் விளையாடிக்கொண்டிருந்துள்ளது. அந்த குழந்தை திடீரென காணாமல் போயுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த குழந்தையின் பெற்றோர் பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் இது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
அதன்படி வழக்கு பதிவு செய்த போலிஸார் குழந்தையை தேடிய நிலையில், அங்கிருந்த ரயில்வே தண்டவாளத்தில் நிர்வாண நிலையில் குழந்தையின் சடலத்தை மீட்டுள்ளனர். பின்னர் குழந்தையை பிரதே பரிசோதனைக்கு அனுப்பிய நிலையில், குழந்தை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டது தெரியவந்துள்ளது.
இந்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக கிடைத்த ஆதாரங்கள் அடிப்படையில் 5 பேரை கைது செய்து போலிஸார் விசாரணை நடத்திவருகின்றனர். இந்த வழக்கு தொடர்பாக பேசிய போலீஸ் எஸ்பி ஞானேந்திர சிங், ரயில்வே தண்டவாளத்தில் இரண்டரை வயது குழந்தை இறந்து கிடப்பதாக தகவல் அளித்தவர் உள்ளிட்ட 5 பேரிடம் விசாரணை நடைபெற்றுவருகிறது. விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவர் எனக் கூறியுள்ளார்.