கர்நாடக மாநில தலைநகர் பெங்களூருவில் சில தினங்களாக அதிக கன மழை கொட்டி தீர்த்தது. இதனால் பெங்களூர் மாநகரமே வெள்ளக்காடாகக் காட்சியளிப்பதுடன் சாலைகளிலும் குடியிருப்பு பகுதிகளிலும் மழை நீர் புகுந்து பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
அதிலும் நகரில் உள்ள சென்ட்ரல் சில்க் போர்டு சந்திப்பு முதல் கிருஷ்ணராஜபுரம் சந்திப்பு வரை சுமார் 17 கி.மீ புறநகர் வட்டச்சாலை சாலையில் 500க்கும் மேற்பட்ட ஐ.டி நிறுவனங்கள் அமைந்துள்ளது. இந்த பகுதி முழுவதும் தற்போது மழை நீரால் மூழ்கியுள்ளது. இப்பகுதியில் மழைநீர் கால்வாய், கழிவுநீர் கால்வாய் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யாததே இந்த நிலைக்குக் காரணம் என கூறப்படுகிறது.
இந்த மழை மற்றும் வெள்ளம் காரணமாக ஏற்கனவே ட்ராபிககில் தடுமாறும் பெங்களூரு நகரம் தற்போது மோசமான போக்குவரத்துக்கு நெரிசல்களை சந்தித்து வருகிறது. இந்த நிலையில், இந்த போக்குவரத்துக்கு நெரிசலில் இருந்து மருத்துவர் ஒருவர் 3 கிலோமீட்டர் தூரம் ஓடி அறுவை சிகிச்சை செய்துள்ள சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது,
மணிப்பால் மருத்துவமனையின் இரைப்பை குடல் அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர் கோவிந்த் நந்தகுமார் பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த ஆகஸ்ட் 30-ஆம் தேதி அவசர லேப்ராஸ்கோபிக் பித்தப்பை அறுவை சிகிச்சை செய்யச் சென்று கொண்டிருந்தபோது, சர்ஜாபூர்-மரதல்லி சாலையில் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொண்டார்.
தந்து தாமதம் நோயாளிக்கு தீங்கு விளைவிக்கும் என்பதை உணர்ந்த டாக்டர் நந்தகுமார் தனது காரை விட்டுவிட்டு மூன்று கிலோமீட்டர் தூரம் ஓடி மருத்துவமனையை அடைந்துள்ளார். அங்கு அவர் அறுவை சிகிச்சை அரங்கை அடைந்தவுடன் செயலில் இறங்கி சிறிதும் தாமதிக்காமல், அறுவை சிகிச்சை செய்ய ஆடையை மாற்றினார்.
பின்னர் அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து நோயாளி சரியான நேரத்தில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இந்த சம்பவம் மருத்துவர் நந்தகுமார் வெளியிட்ட வீடியோ மூலம் வெளிவந்துள்ளது. பலரும் அவரை பாராட்டி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.