ஹரியானா மாநிலம் சோனிபட் பகுதியைச் சேர்ந்தவர் ஜக்பீர். இவர் பேருந்து ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் ஜக்பீர் பஹல்கர் அருகே பேருந்தில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது இளைஞர்கள் சிலர் பேருந்தைப் பின்தொடர்ந்து வந்துள்ளனர். இதனால் ஜக்பீர் அவர்களுடன் வாக்குவாதம் செய்துள்ளார். அப்போது அவர்கள் ஜக்பீரை கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இதையடுத்து அந்த சம்பவம் பற்றி அறிந்த சக ஓட்டுநர்கள் குற்றவாளிகளைக் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் போலிஸார் வழக்குபதிவு மட்டும் செய்து குற்றவாளிகளை கைது செய்யவில்லை.
இதனால் தந்தை இறந்த சோகத்தில் ஜக்பீரின் மகன் சந்தீப் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் அவர்களது உறவினர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து காங்கிரஸ் எம்.எல்.ஏ சுரேந்திர பவார் உயிரிழந்தவரின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறினார். ஜக்பீர் மரணத்திற்குக் காரணமானவர்கள் மீது போலிஸார் நடவடிக்கை எடுக்காமல் இருந்ததே அவரது மகன் தற்கொலைக்குக் காரணம் என குற்றம் சாட்டியுள்ளார். தற்போது இந்த சம்பவம் ஹரியானாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.