உத்தர பிரதேச மாநிலம், மிர்சாபூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பவன் ஜெய்ஸ்வால். Freelance பத்திரிகையாளராக இவர் மக்களுக்கான பல்வேறு நல்ல செய்திகளை வெளியிட்டு வந்தார். அப்படிதான் கடந்த 2019ம் ஆண்டு முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான ஆட்சியில் பள்ளி மதிய உணவு திட்டத்தில் நடைபெற்ற முறைகேடுகளை இந்தியாவிற்கு வெளிச்சம்போட்டுக் காட்டினார்.
மிர்சாபூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் மதிய உணவுத் திட்டத்தில் மாணவர்களுக்கு ரொட்டியும் அதை தொட்டுக்க உப்பு மட்டுமே வழங்கப்பட்டு வந்தது. இதைச் செய்தியாக்கி பவன் ஜெய்ஸ்வால் வெளியிட்டார்.
மேலும் அவர் வெளியிட்ட வீடியோ யோகி ஆட்சிக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியது. ஆனால் திட்டத்தில் நடந்த தவறை சரி செய்யாத யோகி அரசு பவன் ஜெய்வால் மீது வழக்கு பதிவு செய்தது. இதற்கு பத்திரிகையாளர்கள் பலரும் கடும் கண்டனங்களைத் தெரிவித்தனர்.
இப்படி Freelance பத்திரிகையாளராக இருந்து கொண்டு மக்களுக்கான செய்திகளைக் கொடுத்த வந்த பவன் ஜெய்ஸ்வால் கடந்த ஆண்டு புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். வாயில் ஏதோ வலி ஏற்பட இவர் மருத்துவமனைக்குச் சென்று பரிசோதனை செய்துள்ளார்.
அப்போதுதான் அவருக்கு வாயில் புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து இதற்காக சிகிச்சைபெற்று வந்தார். இதனால் கையிலிருந்த பணம், மனைவியின் நகை என அனைத்தும் செலவாகியுள்ளது.
பிறகு 2021ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. பல மாதங்கள் மருத்துவமனையில் இருந்து வீடு திருப்பியுள்ளார். இருப்பினும் மீண்டும் அவருக்கு வாய் பகுதியில் புற்றுநோய் வந்துள்ளது.
இதையடுத்து மருத்துவ ஆலோசனை பெற்று மீண்டும் அறுவை சிகிச்சை செய்து கொண்டு தொடர் சிகிச்சையில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில்தான் அவர் உயிரிழந்துள்ளார். இவரின் மருத்துவ சிகிச்சைக்காக சக பத்திரிகையாளர்கள் பலரும் உதவியுள்ளனர். இவரின் இந்த இறப்புச் செய்தியை அறிந்த பத்திரிகையாளர்கள் பலரும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.