இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ட்விட்டரில் @narendramodi என்ற கணக்கில் செயல்பட்டு வருகிறார். இதில் அரசுத் திட்டங்கள் உட்பட பல்வேறு செய்திகள் குறித்து தினந்தோறும் பதிவிட்டு வருகிறார்.
இந்நிலையில், இன்று அதிகாலை பிரதமர் மோடியின் ட்விட்டர் கணக்கிலிருந்து BitCoin-னுக்கு ஆதரவாகக் கருத்து தெரிவிக்கப்பட்டிருந்தது. இதைப் பார்த்து பிரதம அலுவலக அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.
பின்னர்தான், பிரதமரின் ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டது தெரியவந்தது. உடனே இது குறித்து ட்விட்டர் நிர்வாகத்திற்குத் தெரிவித்துள்ளனர். பிறகு சிறிது நேரத்திலேயே ஹேக்கர்களிடமிருந்து மீட்கப்பட்டது.
இது குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,"பிரதமர் மோடியின் ட்விட்டர் கணக்கு சிறிது நேரம் ஹேக் செய்யப்பட்டது. மேலும் BitCoin இந்தியாவில் சட்டப்பூர்வமாக்குவதாகப் பதிவிடப்பட்டிருந்தது.
உடனே இது குறித்து ட்விட்டர் நிறுவனத்துக்குத் தெரிவிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே கணக்கு மீட்கப்பட்டது. BitCoin தொடர்பாக வெளியான பதிவுகளைக் கருத்தில் கொள்ள வேண்டாம்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் BitCoin முறைப்படுத்துவது குறித்து நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு மசோதா ஒன்றைக் கொண்டுவர உள்ளது. இந்த மசோதா நிறைவேறினால் ஒரு சில BitCoin-கள் மட்டுமே இந்தியாவில் அனுமதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது.
இந்நிலையில் BitCoin இந்தியாவில் சட்டப்பூர்வமாக்குவதாகப் பிரதமர் மோடியின் ட்விட்டர் கணக்கு ஹேக் செய்து கருத்து பதிவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.