கேரள மாநிலம் மலப்புரம் அருகே உள்ள எடப்பால் பகுதியைச் சேர்ந்த ஷம்சீர் என்பவர் தனது மனைவியின் நகையை அடகு வைத்து பணத்தை வீட்டில் வைத்துள்ளார். இந்நிலையில் வீட்டில் இருந்த பணத்தை மர்ம நபர் திருடிவிட்டுச் சென்றதாகவும் மேலும் இதுதொடர்பாக கடிதம் ஒன்றையும் எழுதிவிட்டுச் சென்றுள்ளதாகவும் ஷம்சீர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
இதனையடுத்து போலிஸார் திருட்டு தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் போலிஸாரிடம் ஷம்சீர் அளித்திருந்த கடிதத்தில், “ஷம்சீர் என்னை மன்னித்து விடு.. உங்க வீட்டில் பணம் இருந்தது தெரிந்துதான்நான் அதனை எடுத்தேன். எனக்கு உடல்நிலை சரியில்லை. அதனால்தான் அந்தப் பணத்தை எடுத்தேன். நான் யாரென்று உனக்கு நன்றாகத் தெரியும். அதனால் தற்போது பெயரை குறிப்பிடவில்லை.
நான் திருடியது என்னுடைய வீட்டில் உள்ளவர்களுக்கு தெரியாது. எனவே விரைவில் பணத்தைக் கொடுத்துவிடுகிறேன். நான் வீட்டிற்கு வரும் போது உங்க அம்மா ஏதோ வேலை செஞ்சுட்டு இருந்தாங்க.. மனைவி குளியறையில் இருந்தாங்க. தயவுசெஞ்சு என்னை மன்னிச்சுக்கோங்க” எனத் தெரிவித்துள்ளார். திருட வந்த இடத்தில் திருடிவிட்டு கடிதம் எழுதி வைத்துவிட்டுச் சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.