மும்பையில் இருந்து கோவா செல்லும் சொகுசு கப்பலில் போதை பார்ட்டி நடப்பதாகப் போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்தது. பின்னர் அதிகாரிகள் பயணிகள் போல் அந்த கப்பலில் பயணம் செய்து, தடை செய்யப்பட்ட போதை பொருட்களை பயன்படுத்திய 19 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சொகுசு கப்பலில் போதைப் பொருட்கள் பயன்படுத்தியதாகக் கைது செய்யப்பட்டவர்களின் பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானும் ஒருவர். மேலும் ஆர்யன்கானின் கார் ஓட்டுநரிடமும் போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலிஸார் சனிக்கிழமையன்று விசாரணை நடத்தினர்.
இந்த வழக்கில் திரைப்பட தயாரிப்பாளர் இம்தியாஸ் காத்ரி பெயரும் அடிபட்டுள்ளதால், அக்டோபர் 11ம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலிஸார் அவருக்குச் சம்மன் அனுப்பியுள்ளனர்.
இந்நிலையில், சொசுகு கப்பலுக்குப் போதைப் பொருட்கள் எப்படிச் சென்றது என்பது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில், பெண் ஒருவர் சானிட்டரி நாப்கினில் மறைந்து போதைப் பொருட்களை கப்பலுக்கு எடுத்துச் சென்றது தெரியவந்துள்ளது. மேலும் இது தொடர்பாகப் போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.