பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி டெல்லியில் பல மாதங்களாக நாடுமுழுவதும் உள்ள விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
இந்நிலையில் ஹரியானா மாநிலம், கர்னால் நகரில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக மாநில முதல்வர் மனோகர் லால் கட்டர் மற்றும் பா.ஜ.க தலைவர் ஓம் பிரகாஷ் தன்கர் ஆகியோர் வந்திருந்தனர்.
அப்போது அங்குக் கூடியிருந்த விவசாயிகள் முதல்வருக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். இதனால் ஆவேசமடைந்த போலிஸார் திடீரென விவசாயிகள் மீது தடியடி நடத்தினர். போலிஸாரின் இந்த தாக்குதலில் 10க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்குப் பலத்த காயம் ஏற்பட்டது. பலரின் மண்டை உடைந்தது.
போலிஸாரின் இந்த அராஜகத்தைக் கண்டித்து மாநில முழுவதும் விவசாயிகள் சாலைகளை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் போலிஸாரின் இந்த செயலுக்குக் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்புகள் தெரிவித்துள்ளன.
இந்நிலையில், விவசாயிகள் மீதான தாக்குதலுக்கு முன்னதாகவே துணை நிலை மாஜிஸ்திரேட் சின்சா, போலிஸாரிடம் விவசாயிகளை அடித்து மண்டையை உடைக்கும் படி கூறும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வீடியோவில், துணை நிலை மாஜிஸ்திரேட் சின்சா, போலிஸாரிடம் “நீங்கள் உங்கள் லத்தியை எடுத்துக்கொள்ளுங்கள். உங்களால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு வலுவாக அவர்களை அடியுங்கள். இதில் உங்களுக்கு எந்த சந்தேகமும் வேண்டாம். யாருடைய உத்தரவுக்கும் காத்திருக்க வேண்டாம். விவசாயிகள் மண்டை உடைய வேண்டும்” என பேசுகிறார்.
இந்த வீடியோ வெளியாகி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விவசாயிகள் மீது திட்டமிட்டே தாக்குதல் நடத்த உத்தரவிட்ட துணை நிலை மாஜிஸ்திரேட் சின்சா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.