நாட்டில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை ஆக்ரோஷமாக பரவிக் கொண்டிருக்கிறது. இதன் காரணமாக நாளொன்றுக்கு 2.50க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இதனால் மருத்துவமனைகளில் இடமில்லாமல் ஒரே படுக்கையில் இரு நோயாளிகள் சிகிச்சை பெறும் அளவுக்கு அவலம் ஏற்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவில் ஒவ்வொரு நாளில் 50 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்படுகிறது. தீவிரமான தொற்றுடன் அனுமதிக்கப்படும் தொற்றாளர்களுக்கு உரிய ஆக்சிஜன், வெண்டிலேட்டர் கொண்ட சிகிச்சை அளிக்க முடியாமல் அம்மாநில சுகாதார பணியாளர்கள் தவித்து வருகின்றனர்.
பற்றாக்குறையை தீர்க்க பிரதமர் மோடியை தொடர்புகொண்ட மராட்டிய முதலமைச்சர் உத்தவ் தாக்ரேவுக்கு கிடைத்த ஒரே பதில் பிரதமர் தற்போது மேற்கு வங்க தேர்தலில் பிசியாக இருக்கிறார் என்பதே என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்படியாக ஒரு நாட்டின் பிரதமரும் அவரது அமைச்சரவை சகாக்களும் ஒரு பெருந்தொற்றால் போராடிக்கொண்டிருக்கும் மனித சமூகத்தை காப்பாற்றாமல் தேர்தல் வேலைகளில் ஈடுபட்டு வருவது பெரும் அதிர்ச்சியையும் ஆத்திரத்தையுமே உண்டாக்குகிறது என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
நிலமை இப்படி இருக்கையில், கொரோனா தடுப்பு மருந்தாக பயன்படுத்தப்படும் ரெம்டெசிவர் மருந்துகளை மகாராஷ்டிர மாநில அரசுக்கு கொடுக்கக் கூடாது எனவும் அவ்வாறு கொடுத்தால் உரிமம் ரத்து செய்யப்படும் எனவும் மத்திய அரசே நேரடியாக 16 மருந்து நிறுவனங்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது என மராட்டிய மாநில அமைச்சர் நவாப் மாலிக் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
மேலும் இப்படியான இக்கட்டான சூழல் நிலவும் வேளையில் மத்திய அரசின் எச்சரிக்கை மிகவும் ஆபத்தான முன்னுதாரணமாகும். ஆகவே மருந்து நிறுவனங்களிடம் இருந்து தேவையான மருந்துகளை கைப்பற்றி தொற்றாளர்களுக்கு கொடுப்பது தவிர எங்களுக்கு வேறு வழி தெரியவில்லை என நவாப் மாலிக் குறிப்பிட்டுள்ளார்.
கொத்துக் கொத்தாக மக்கள் உயிருக்கு போராடிக்கொண்டும் உயிரை பறிகொடுத்துக் கொண்டும் இருக்கும் வேளையில் மத்திய பாஜக அரசு மக்கள் வாழ்வில் விளையாடுவது எதேச்சதிகாரத்தின் உச்சபட்சம் என கண்டனங்களும் எழுந்துள்ளன.