மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு ஆட்சி பெறுப்பெற்றதில் இருந்து கொண்டு வரும் திட்டங்கள் யாவும் கார்ப்பரேட் நலன் சார்ந்ததாகவும் ஆர்.எஸ்.எஸ்ஸின் இந்துத்வா சித்தாந்தங்களின் அடிப்படையிலும் இருந்து வருகிறது.
அதன்படி, பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரைவார்ப்பதும், குடியுரிமை சட்டம் மூலம் மக்களை பிளவுபடுத்தும் வேலைகளையும் செய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக தற்போது மாணவர்களின் நலனை பாதிக்கும் வகையில், வர்ணாசிரம கொள்கையின்படி புதிய கல்விக் கொள்கையைக் கொண்டு வந்துள்ளது.
மேலும், தமிழகம் போன்ற மாநிலங்களில் மும்மொழிக் கொள்கையைப் பாடத்திட்டத்தின் வழியாகக் கொண்டு வந்து இந்தி, சமஸ்கிருத மொழிகளை திணிக்கப் பார்க்கிறது. அதுமட்டுமல்லாது, கொரோனா பேரிடரைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளில் ஆர்வம் காட்டாத பா.ஜ.க அரசு, ஊரடங்கு காலத்தை பயன்படுத்தி சில அவசர சட்டங்களையும், திட்டங்களையும் நிறைவேற்றி வருகிறது.
இந்நிலையில், ஒருவரத்திற்கு மேலாக நடந்துவரும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில், எதிர்கட்சி எம்.பிக்கள் மோடி அரசு கொரோனா ஊரடங்கு காலத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகின்றனர். அதேவேளையில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கேள்விக்களுக்கு முறையாக மதிப்பளிக்காமல் மோடி அரசாங்கம் செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அதுமட்டுமல்லாது, மத்திய அரசிடம் எழுப்பப்படும் கேள்விகளுக்கு தங்களிடம் பதிலளிக்க தரவுகள் இல்லை என மத்திய அரசு கூறிவருவது எதிர்கட்சி எம்.பிக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக, ஊரடங்கின் போது புலம்பெயர் தொழிளாலர்கள் எத்தனை பேர் உயிரிழந்துள்ளனர்?, கொரோனா காலத்தில் நாடு முழுவதும் எத்தனை பேர் வேலையிழந்துள்ளனர்?, ஊரடங்கு காலத்தில் எத்தனை விவசாயிகள் உயிரிழந்துள்ளனர்?, கொரோனாவால் பாதிக்கப்பட்டு எத்தனை மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர்? போன்ற மிகவும் முக்கியமான கேள்விகளை பாராளுமன்ற கூட்டத்தொடரின்போது எதிர்க்கட்சிகள் மத்திய பாஜக அரசை நோக்கி எழுப்பின. ஆனால், இந்த கேள்விகளுக்கு பதிலளிக்க தங்களிடம் எந்த வித தரவுகளும் (தகவல்களும்) இல்லை என மத்திய அரசு தெரிவித்து விட்டது.
முதலாவதாக, விவசாயிகள் தற்கொலை தொடர்பாக எழுப்பட்ட கேள்விகளுக்கு, மத்திய உள்துறை இணையமைச்சா் ஜி.கிஷன் ரெட்டி எழுத்துபூா்வமாக அளித்த பதிலில், தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தில் விவசாயிகள் தற்கொலை தொடா்பான தகவல் என்று தனியாக இல்லை.
ஏனெனில், பல்வேறு மாநில, யூனியன் பிரதேச அரசுகள் தங்கள் பகுதியில் விவசாயிகள், விவசாயக் கூலித் தொழிலாளா்கள் தற்கொலை செய்து கொண்டது தொடா்பான தகவல்களைத் தெரிவிக்கவில்லை. இதனால், தேசிய அளவிலான விவசாயிகள் தற்கொலை தொடா்பான தகவல்கள் அரசிடம் இல்லை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்தாதாக புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பற்றி எழுப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை இணையமைச்சர் வி.கே.சிங், ”மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை தகவலின்படி, ஏறக்குறைய 1.06 கோடிக்கும் அதிகமான புலம்பெயர் தொழிலாளர்கள் லாக்டவுன் காலத்தில் நடந்தே சொந்த மாநிலம் சென்றுள்ளார்கள்.
மார்ச் மாதம் முதல் ஜூன் மாதம் வரையிலான இந்தக் காலகட்டத்தில் 81 ஆயிரத்து 385 சாலை விபத்துகள் நடந்துள்ளன. இதில், 29 ஆயிரத்து 415 பேர் உயிரிழந்தனர். ஆனால், புலம்பெயர் தொழிலாளர்கள் மட்டும் லாக்டவுன் காலத்தில் நடந்த விபத்துகளில் எத்தனை பேர் உயிரிழந்தார்கள் என்ற தகவல் அரசிடம் இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.
கொரோனா காலத்தில் மத்திய அரசு முறையாக தடுப்பு நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக நடந்துக்கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், மருத்துவமனைகளும் சிகிச்சை மையங்களும் மாநிலப் பட்டியலில் வருவதால், கோவிட்-19 பெருந்தொற்றின் போது பணியின் காரணமாக உயிரிழந்த தூய்மைப் பணியாளர்கள் பற்றிய தகவல்கள் மத்திய அரசிடம் இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதேப்போல் ஜி.எஸ்.டி வளர்ச்சி குறித்து எழுப்பட்ட கேள்விக்கும் தகவல் இல்லை என்பதையே மத்திய அரசு தெவித்துள்ளது. தொடர்ச்சியாக எந்த தகவலை வெளிப்படையாக அறிவிக்காத பா.ஜ.க தலைமையிலான (தேசிய ஜனநாயக கூட்டணி - (NDA)) என்.டி.ஏ அரசு என்றால் ’எந்த தரவுகளும் இல்லை’ என்று பொருள் என ஆளும் மத்திய பாஜக அரசை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சசி தரூர் விமர்சனம் செய்துள்ளார்.
அவரைத் தொடர்ந்து தி.மு.க எம்.பி கனிமொழி அவர்களும் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “NDA = NO DATA AVAILABLE தகவல் இல்லை என்பதே மத்திய அரசின் தாரக மந்திரமாகிவிட்டது” என விமர்சித்துள்ளனர்.