
கொரோனா வைரஸ் தொற்று நாடு முழுவதும் தீவிரமடைந்து வருகிறது. நாள்தோறும் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனாவை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் கோடிக்கணக்கானோர் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகின்றனர்.
இந்நிலையில், பீகார் மாநில சட்டப்பேரவையின் பதவிக் காலம் நவம்பர் மாதத்துடன் முடிவடைய இருப்பதால் அதற்குள் சட்டப்பேரவைத் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
கொரோனா அச்சுறுத்தல் காலத்தில் பீகார் சட்டசபை தேர்தலை நடத்துவது மக்களின் உயிருக்கும், உடல்நலத்துக்கும் பெரும் அச்சுறுத்தலாக அமையும் என்பதால் தேர்தலை தள்ளி வைக்கவேண்டும் எனக் கோரி அவினாஸ் தாகூர் என்பவர் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் அமர்வு, “தேர்தலை தள்ளி வைக்கவும், தேர்தல் ஆணையத்தின் பணிகளில் தலையிடவும் கொரோனா பரவல் சரியான காரணம் அல்ல. என்ன செய்யவேண்டும் என தலைமை தேர்தல் ஆணையருக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியாது. அனைத்து சூழ்நிலைகளையும் அவர் பரிசீலனை செய்தே முடிவு செய்வார்.
தேர்தல் நடத்த அறிவிப்பு வெளியாகவில்லை. அப்படி இருக்கையில், தேர்தலை நடத்த வேண்டாம் என நாங்கள் எப்படி உத்தரவிட முடியும்? தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் சூழ்நிலைகளை தேர்தல் ஆணையம் நன்கு பரிசீலனை செய்யும்” எனத் தெரிவித்து மனுவை தள்ளபடி செய்தனர்.








