ஐ.சி.எம்.ஆர் விஞ்ஞானி ஒருவருக்கு கொரோனா உறுதியானதால், ஐ.சி.எம்.ஆர் அலுவலகம் சீல் வைக்கப்பட்டு தூய்மைப்பணி நடந்து வருகிறது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போதைய நிலையில் 1 லட்சத்து 91 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், கொரோனா தொடர்பாக அரசுக்கு ஆலோசனை வழங்கிவரும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) மூத்த விஞ்ஞானிக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.
கொரோனா பாதிப்புக்குள்ளான மூத்த விஞ்ஞானி மும்பையில் இருந்து டெல்லி வந்துள்ளார். கொரோனா அறிகுறிகள் தென்படவே, அவருக்கு பரிசோதனை நடத்தியதில் கொரோனா உறுதியானது. இதையடுத்து அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
பாதிக்கப்பட்டவருடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைபடுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஐ.சி.எம்.ஆர் அலுவலகத்தில் நடந்த சில கூட்டங்களில் அந்த விஞ்ஞானி கலந்து கொண்டதால், அந்த அலுவலகம் சீல் வைக்கப்பட்டு தூய்மை பணி நடைபெற்று வருகிறது. இரண்டு நாட்களுக்குப் பின்னர் தலைமை அலுவலகம் இயங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
டெல்லியில் உள்ள நிதி ஆயோக் அலுவலகத்தில் அலுவலர் ஒருவருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால், அந்த அலுவலகத்தின் 3வது மாடி சீல் வைக்கப்பட்டு, தூய்மைப்பணி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.