கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை குறித்து, பிரதமர் மோடி, ஏற்கனவே இரண்டு முறை, நாட்டு மக்களுக்கு உரையாற்றியுள்ளார். இந்நிலையில், இன்றைய தினம் நாட்டு மக்களிடையே உரையாற்றிய மோடி, ஊரடங்கை கடைபிடித்து வருவதில் இந்தியா முன்னுதாரணமாக இருந்து வருகிறது.
ஊரடங்கு உத்தரவைக் கடைபிடித்து வரும் நாட்டு மக்களின் ஒத்துழைப்புக்கு நன்றி தெரிவித்தார். அதுமட்டுமின்றி, ஏப்ரல் 5-ம் தேதி இரவு 9 மணி முதல் 9 நிமிடம் வீட்டின் விளக்குகளை அனைத்துவிட்டு, டார்ச், அகல் விளக்குகளை ஏற்ற வேண்டும் என பிரதமர் மோடி உரையாற்றினார்.
வீட்டின் நான்கு மூலைகளிலும் ஔியை பரப்பும் வகையில் டார்ச், அகல் விளக்கு மெழுகுவர்த்தியை ஏற்ற வேண்டும் என தெரிவித்தார். மோடியின் இந்த அறிவிப்புக்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது. மக்கள் கொரோனா அச்சத்தில் இருக்கும் போது மக்களுக்கு தேவையான உதவிகளை செய்து தருவதற்கு மாறாக இதுபோல எதற்கும் உதாவாத வேலையை செய்ய சொல்கிறார் என்று விமர்சனம் எழுந்துள்ளது.
இந்நிலையில், ஏப்ரல் 5-ல் பிரதமர் மோடி கூறியதை நாங்கள் ஏற்கிறோம்; ஆனால் தயவு செய்து வல்லுனர்களின் ஆலோசனையை கேளுங்கள் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதுதொடர்பாக ட்விட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “ஏப்ரல் 5-ல் பிரதமர் மோடி கூறியதை நாங்கள் ஏற்கிறோம்; ஆனால் தயவு செய்து பொருளாதார வல்லுநர்கள்; நோயியல் தொற்று நிபுணர்களிடம் ஆலோசனையும் நீங்கள் கேட்க வேண்டும். இன்று உங்களிடமிருந்து நாங்கள் ஏழைகளுக்கான வாழ்வாதார ஆதரவு பற்றி அறிவிப்பீர்கள் என்று எதிர்பார்த்தோம்.
ஒவ்வொரு உழைக்கும் ஆண்கள், பெண்கள், தினக்கூலிகள் மற்றும் தொழிலபதிபர்கள் என அனைவருமே, பொருளாதார சரிவை மீட்டெடுக்க வழிவகை செய்வதாக அறிப்பீர்கள் என எதிர்பார்த்தனர். ஆனால் தங்களது உரையில் அதுபோன்ற அறிவிப்பு எதுவும் வெளியாகாததால் ஏமாற்றமடைந்துள்ளனர்.