டெல்லியில் கார்கி கல்லூரி என்ற மகளிர் ஒன்று செயல்பட்டுவருகிறது. 50 ஆண்டுகளைக் கடந்து செயல்பட்டு வரும் இந்தக் கல்லூரியின் ஆண்டு விழா கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்றது. விழா நடந்து கொண்டிருந்தபோது, கல்லூரிக்கு வெளியாட்கள் வந்து மாணவிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக புகார் எழுந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பான தகவலை அக்கல்லூரியைச் சேர்ந்த மாணவி ஒருவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். ’ரெவெரி’ என்று அழைக்கப்படும் மூன்று நாள் நீடித்த விழாவின் கடைசி நாளான வியாழக்கிழமை பிற்பகல் 3.30 மணியளவில் சில ஆண்கள், அடையாள அட்டை இல்லாமல் வளாகத்திற்குள் நுழையத் தொடங்கினர்.
அதில் போதையில் இருந்த நடுத்தர வயது ஆண் ஒருவர் எங்களை பாலியல் ரீதியாகக் கட்டாயப்படுத்தினார். மேலும் பல விதமான பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டனர் என்றும் கூறிப்பிட்டுள்ளார்.
அதேபோல் மற்றொரு மாணவி வெளியிட்ட பதிவில், சில மாணவிகளை வலுக்கட்டாயமாக கல்லூரி ஓய்வறைகளில் அடைத்து வைத்து பாலியல் சித்திரவதை செய்துள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், சில மர்ம நபர்கள் வளாகத்திலிருந்து மெட்ரோ நிலையத்திற்கு செல்லும் வழியிலும் தங்களைப் பின்தொடர்ந்ததாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை கல்லூரி நிர்வாகம் சார்பில் போலிஸில் புகார் எதுவும் அளிக்கப்படவில்லை. இதுகுறித்து அக்கல்லூரி முதல்வர் கூறுகையில், சம்பவம் நடைபெற்ற அன்று கல்லூரியில் போலிஸார், பாதுகாப்பு அதிகாரிகள் என முழுக்கண்காணிப்பில் இருந்தனர்.
மாணவிகள் கூறுவதுபோல எதுவும் நடந்திருக்கவாய்ப்பில்லை. வெளியில் நடக்கும் அசம்பாவிதங்களுக்கு கல்லூரி நிர்வாகம் தலையிட முடியாது” என அக்கறையின்றி தெரிவித்துள்ளார்.
கல்லூரி முதல்வரின் இந்த பதிலுக்கு மாணவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். கல்லூரி நிர்வாகத்தின் அலட்சியத்தால் தான் இந்த சம்பவம் நடந்ததாக குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்காக விரைவில் போராட்டம் நடத்தப்படும் என்றும் அறிவித்துள்ளனர்.