உலகம் முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெற்று வருகிறது. இந்தியாவிலும் புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெறும் வேளையில், தலைநகரில் கடும் குளிரிலும் புத்தாண்டு கொண்டாட்டத்தைப் புறக்கணித்து விட்டு பெண்கள் மற்றும் குழந்தைகள் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக 10-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
டெல்லியில் சஹீன் பாக் பகுதியில் நடைபெறும் போராட்டம் புத்தாண்டு தினத்தோடு முடிந்துவிடும் என்றும், போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் புத்தாண்டைக் கொண்டாடச் சென்றுவிடுவார்கள் என்றும் இந்துத்வா கும்பலைச் சேர்ந்தவர்கள் கொச்சைப்படுத்தி வந்தனர்.
இந்நிலையில் நேற்று இரவு டெல்லியில் வழக்கம்போல் இஸ்லாமிய பெண்கள் தங்களின் போராட்டத்தைத் துவங்கினார்கள். பெண்கள் மட்டுமே தலைமையேற்று நடத்தும் இந்தப் போராட்டத்திற்கு ஏராளமான பொதுமக்கள் தொடர்ந்து ஆதரவு அளித்து வருகின்றனர்.
இந்தப் போராட்டம் இரவு பகலாக நடைபெறுவதால், போராட்டக்கார்களுக்கு அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் நிழற்பந்தல் அமைத்துக் கொடுத்தனர். மேலும், போராட்டத்தில் ஈடுபடும் இஸ்லாமிய பெண்களுக்கும் பிற மதங்களைச் சார்ந்த பெண்கள் உணவு சமைத்து பரிமாறி வருகின்றனர்.
அதுமட்டுமின்றி, குளிரால் சிரமப்படுபவர்களுக்கு போர்வை மற்றும் அத்தியாவசியப் பொருட்களை வழங்கி போராட்டக்காரர்களை உற்சாகப்படுத்தி வருகின்றனர்.
இதுதொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்ட பெண் ஒருவர் கூறுகையில், “18 நாளாக நடைபெறும் எங்களின் போராட்டத்திற்கு அனைத்து மதத்தவரும் பல்வேறு உதவிகளைச் செய்துவருகின்றனர். எங்களிடம் எந்த வேற்றுமையும் இல்லை. ஆனால் அரசு தான் எங்களை பிரிக்கப் பார்க்கிறது.
பெண்கள் நடத்தும் போராட்டம் தானே எளிதில் களைந்துவிடும் என ஏளனம் செய்தார்கள். போராட்டத்தை விட்டுவிட்டு புத்தாண்டு கொண்டாட்டத்திற்குச் சென்றுவிடுவோம் என கூறினார்கள். அவர்களுக்கு நாங்கள் கூறவிரும்புவது இதுதான் “எங்கள் கொண்டாட்டம் இதுதான், வீதிகள் தான் எங்கள் கொண்டாட்டத்திற்கான மேடை. தேசபக்தி எனப் பேசித் திரிபவர்களை விட நாங்கள் தேசத்தை அதிகம் நேசிக்கிறோம்” எனத் தெரிவித்தார்.
முன்னதாக இந்தப் போராட்டத்தின் போது இரவு 12 மணியாகும் போது அனைவரும் எழுந்து தேசியம் கீதம் பாடி புத்தாண்டை வரவேற்றனர்.