குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராகப் போராடிய ஜாமியா மாணவர்களை மிரட்டும் நோக்கில் பேசிய ஹெச்.ராஜாவிற்கு எதிராக #ArrestHraja என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டாகியுள்ளது.
குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நாடுமுழுவதும் நடைபெற்று வரும் போராட்டங்களைச் சீர்குலைக்கவும், போராட்டத்தின் போது வன்முறையைத் தூண்டிவிடவும் சதி செய்து வந்த பா.ஜ.க, தற்போது போராடுபவர்களை நேரடியாகவே மிரட்டும் வேலையில் இறங்கியுள்ளது.
பா.ஜ.கவில் உயர் பொறுப்பில் இருக்கும் முக்கிய நபர்களே வெளிப்படையாக மிரட்டல் விடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதில் மிகமுக்கியமான நபர் பா.ஜ.கவின் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா. வன்முறையைத் தூண்டும் பேச்சுகளுக்குப் பெயர்போன ஹெச்.ராஜா சமீபத்தில் போராடும் மாணவர்களை கொச்சைப்படுத்திப் பேசினார்.
அதற்கு வலுவான கண்டனங்கள் எழுந்ததால் ஒருவார காலம் ட்விட்டர் பக்கம் தலைகாட்டாமல் இருந்தார். இந்நிலையில் தற்போது மாணவர்கள் மீது குண்டு வீசுவதாக அவர் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
தாங்கள் கொண்டுவந்த சட்டத்திற்கு ‘ஆதரவு’ தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்திய கோஷ்டி பா.ஜ.க என்பது அனைவருக்கும் தெரியும். அப்படி நடைபெற்ற ஆதரவு ஆர்ப்பாட்டத்தில் பா.ஜ.க நிர்வாகிகள் கலந்துகொண்டனர். அப்போது பேசிய அக்கட்சியின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, குடியுரிமை சட்டத்திற்கு எதிராக எதிர்க்கட்சிகள் தூண்டிவிடுவதாகவும், வழக்கம் போல போராட்டத்தில் நக்ஸல் ஊடுருவல் இருப்பதாவும் தெரிவித்த அவர் இந்த முறை முஸ்லிம் தீவிரவாதிகளும் இருப்பதாக அவதூறு பரப்பினார்.
மேலும், மாணவர்களின் போராட்டத்தை பொறுத்துக்கொள்ள முடியாமல் போராடிய மாணவர்களை கொச்சைப்படுத்திப் பேசிய ஹெச்.ராஜா, “மாணவர்கள் கல்லூரி வளாகத்திற்குள் இருந்து கற்களை வீசினால், கதவுகளின் இந்தப் பக்கமிருந்து குண்டு வீசுவோம்” என வன்முறையைத் தூண்டும் விதமாகவும், மிரட்டும் தொனியிலும் பேசியுள்ளார்.
மேலும் ஹெச்.ராஜாவின் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதை அடுத்து, ஹெச்.ராஜாவிற்கு எதிராக #ArrestHraja என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டாகியுள்ளது. மாணவர்களை மிரட்டும் நோக்கில் பேசிய பா.ஜ.க தேசியச் செயலாளர் ஹெச்.ராஜாவைக் கைது செய்யவேண்டும் என பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.