குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் என்.ஆர்.சி (தேசிய குடிமக்கள் பதிவேடு) ஆகியவற்றிற்கு எதிராக நாடு முழுவதும் தீவிரமான போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி உரையாற்றிய வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
அந்தக் காணொளியில், குடியுரிமை சட்டத்திற்கு எதிராகப் போராடும் மக்களின் குரல்களுக்கு மத்திய அரசு செவிசாய்க்க வேண்டும் என்றும், மக்களின் அடிப்படை உரிமைகளை காத்திட காங்கிரஸ் கட்சி என்றும் துணை நிற்கும் என்றும் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.
மேலும் பேசிய அவர், “நாடெங்கிலும் உள்ள மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்களுக்கு எதிராக பா.ஜ.க அரசு கட்டவிழ்த்துவிட்ட கொடூரமான அடக்குமுறை குறித்து காங்கிரஸ் கட்சி ஆழ்ந்த வேதனையையும் கவலையையும் வெளிப்படுத்துகிறது.
ஜனநாயகத்தில் மக்களுக்கு அரசின் தவறான முடிவுகள் மற்றும் கொள்கைகளுக்கு எதிராக குரல் எழுப்புவதற்கும் அவர்களின் கவலையை பதிவு செய்வதற்கும் உரிமை உண்டு. அதேபோல் குடிமக்களின் கவலைகளுக்கு தீர்வு காண்பதும் அரசாங்கத்தின் கடமை. போராடும் மக்கள் மீதான அடக்குமுறைகளை அரசு கைவிட வேண்டும்.
குடியுரிமை திருத்தச் சட்டம் பாரபட்சமானது. என்.ஆர்.சி ஏழை, சிறுபான்மையின மக்களை வெகுவாகப் பாதிக்கும். பணமதிப்பிழப்பு காலத்தைப் போலவே மக்கள் அவர்களின் மூதாதையர்களின் குடியுரிமையை நிரூபிக்க வரிசையில் நிற்க வேண்டியிருக்கும். மக்களின் அச்சங்கள் உண்மையானவை, நியாயமானவை.
இந்திய மக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்க காங்கிரஸ் கட்சி எப்போதும் துணைநிற்கும். அரசியலமைப்பின் மதிப்புகளைப் பாதுகாக்கவும் நாங்கள் முழுமையாக உறுதிபூண்டுள்ளோம் என்று மக்களுக்கு உறுதியளிக்கிறோம்" எனத் தெரிவித்துள்ளார்.