நாட்டின் பொருளாதாரம் கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடுமையான வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. ஜி.டி.பி வளர்ச்சி விகிதம் 5% ஆகக் குறைந்துள்ளது.
இதனால் பல்வேறு தொழில்துறை நிறுவனங்கள் முடங்கும் அபாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. மேலும், லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலையை இழந்து மாற்று வேலை கிடைக்காமல் தவித்து வருகின்றனர்.
இந்நிலையில், ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிபிஐ காவலில் உள்ள முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் நேற்று மாலை ஆஜர்படுத்தப்பட்டார்.
அதன் பிறகு ப.சிதம்பரத்திடம் கேள்வி கேட்க சில நொடிகள் செய்தியாளர்களுக்கு வாய்ப்புக் கிடைத்தது. அப்போது, 15 நாட்களாக சிபிஐ காவலில் இருப்பது குறித்து ஏதேனும் சொல்ல விரும்புகிறீர்களா என்று கேள்வி எழுப்பியதற்கு 5% என பதிலளித்தார் ப.சிதம்பரம்.
இதனையடுத்து, 5% என்றால் என்ன? ஜிடிபியா எனச் செய்தியாளர் கேட்க, அதற்கு ப.சிதம்பரம் 5% பற்றி ஞாபகம் இல்லையா என எதிர்க்கேள்வி கேட்டு சென்றுவிட்டார். இந்த நிகழ்வு சிபிஐ நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
தன்னை இக்கட்டான சூழலில் மோடி அரசு சிறைப்படுத்தி வைத்திருந்தாலும், நாட்டின் பொருளாதாரம் குறித்து வெறும் 5% என்ற ஒற்றை வார்த்தையில் ப.சிதம்பரம் பேசியிருப்பது பா.ஜ.கவினரை கடுமையான அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ப.சிதம்பரம் பேசிய இந்தக் காணொளியை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த கார்த்தி சிதம்பரம், இந்திய பொருளாதாரத்தின் நிலை பற்றி ப.சிதம்பரத்தின் பதில் என குறிப்பிட்டிருந்தார்.
அதன் பிறகு, காங்கிரஸ், தமிழக காங்கிரஸ் கமிட்டியின் ட்விட்டர் பக்கங்களிலும் செய்தியாளரிடம் ப.சிதம்பரம் பேசிய வீடியோ பகிரப்பட்டுள்ளது. தற்போது இந்த காணொளி சமூக வலைதளங்களில் பலர் பகிர்ந்தும் அவரது துணிச்சலான பேச்சை பாராட்டியும் வருகின்றனர்.