ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்துக்கான சட்டப்பிரிவுகள் 370 மற்றும் 35ஏ ஆகியவற்றை திரும்பப்பெற்றதாக மத்திய அரசு மக்களவை மற்றும் மாநிலங்களவையில் அறிவித்தது.
மேலும், காஷ்மீரை இரண்டாகப் பிரித்து ஜம்மு காஷ்மீரை சட்டப்பேரவையுடன் கூடிய யூனியன் பிரதேசமாகவும், லடாக் பகுதியை சட்டப்பேரவையில்லா யூனியன் பிரதேசமாகவும் அறிவித்தது. இந்த அறிவிப்பு நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், ஜம்மு காஷ்மீரின் முதல் ஐ.ஏ.எஸ். அதிகாரியான ஷா ஃபெசல் காஷ்மீர் மாநில நிலவரம் குறித்து, 80 லட்சத்துக்கும் மேலான மக்கள் வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளது வேதனையாக உள்ளது என்றும், காஷ்மீரிகளுக்கு மத்திய அரசு மிகப்பெரிய துரோகத்தை செய்திருக்கிறது என்றும் குற்றஞ்சாட்டி இருந்தார்.
இது தொடர்பாக தனது ட்விட்டரில் பதிவிட்டிருந்த முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஷா ஃபெசல் இவ்வாறு சிந்திருத்திருக்கும் நிலையில், காஷ்மீரில் உள்ள ஒவ்வொரு சராசரி மக்களும் எம்மாதிரியான மனநிலையில் இருப்பார்கள் எனச் சிந்தித்துப் பாருங்கள் எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அடாவடியான தேசியவாதத்தின் மூலம் இதுவரை எந்த பிரச்னையாவது தீர்க்கப்பட்டுள்ளதா என ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.