நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பதவி விலகவிருப்பதாகத் தகவல் பரவியது. ஆனால், இந்தச் செய்தியைத் திட்டவட்டமாக மறுத்தது காங்கிரஸ் கட்சி.
இந்நிலையில், காங்கிரஸ் செயற்குழு கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், குலாம்நபி ஆசாத், ப.சிதம்பரம், மல்லிகார்ஜூன கார்கே, கேப்டன் அமரீந்தர் சிங் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் பங்கேற்றனர்.
இந்தச் செயற்குழு கூட்டத்தில் தேர்தல் தோல்விக்கான காரணம் பற்றியும், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்தும் 3 மணி நேரம் விவாதம் நடத்தப்பட்டது. இதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தியே நீடிப்பார் என காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கட்சியின் அனைத்து முடிவுகளையும் எடுக்கும் அதிகாரத்தை ராகுல் காந்திக்கு வழங்கி காங்கிரஸ் செயற்குழு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.