ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்காக கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 55 புதிய இடங்களுக்கு மத்திய அரசு டெண்டர் விட்டது. அதில் விழுப்புரம் மற்றும் புதுவை ஆகிய இடங்களும் இடம்பெற்றுள்ளன. இந்த இடங்களில் நிலப்பரப்பு ஓ.என்.ஜி.சி. நிறுவனத்துக்கும், கடற்பரப்பை வேதாந்தா நிறுவனத்துக்கும் ஹைட்ரோ கார்பன் எடுக்க டெண்டர் விடப்பட்டுள்ளது.புதுச்சேரி மற்றும் விழுப்புரத்தில் ஹைட்ரோ கார்பன் எடுப்பது தொடர்பான ஆய்வை மேற்கொள்ள தற்போது மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இதுகுறித்து புதுவை முதல்வர் நாராயணசாமி ட்விட்டரில் கருத்து கூறியுள்ளார். அதில், புதுச்சேரி மாநிலத்தின் எந்தப்பகுயிலும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த அரசு அனுமதி வழங்காது. மக்களுக்கு எதிரான திட்டத்தை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என மாநில முதல்வர் நாராயணசாமி உறுதிபட கூறியுள்ளார். மேலும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தடுத்து நிறுத்துவது தொடர்பாக மத்திய அமைச்சரை சந்திக்க உள்ளதாகவும் கூறியுள்ளார்.
பின்னர் தனது வீட்டில் செய்தியாளர்களை சந்தித்த நாராயணசாமி, ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அனுமதிக்க முடியாது எனவும், திட்டத்தை கொண்டு வந்தால் ஒத்துழைப்பு அளிக்க மாட்டோம் எனவும் கூறி மத்திய அரசுக்கு ஏற்கனவே கடிதம் அனுப்பியுள்ளோம். ஆனால் தற்போது மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளதாக தகவல் வருகிறது. இது குறித்து மத்திய அரசு கடிதம் எதுவும் எங்களுக்கு அனுப்பவில்லை. அப்படி கடிதம் வந்தாலும் அந்த கடிதத்தை மத்திய அரசுக்கே திருப்பி அனுப்புவோம். புதுச்சேரியில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்தகூடாது என்பதில் உறுதியாக உள்ளோம் என கூறினார்