
தமிழ் திரையுலகம் முன்னேற காரணமாக இருந்தவர்களில் AVM நிறுவனமும் ஒன்று. AVM நிறுவனத்தின் உரிமையாளர் காரைக்குடியை சேர்ந்த ஏ.வி.மெய்யப்பன், முதலில் அல்லி அர்ஜுனா என்ற தமிழ் படத்தை தயாரித்து பிரபலமானார். தமிழ் மட்டுமில்லாமல், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிப் படங்களையும் தயாரித்தார்.
தொடர்ந்து தெலுங்கில் வெளியான பூகாலிஸ் என்ற படம் இவருக்கு பெரிய ஹிட் கொடுக்கவே, அடுத்தடுத்து படங்களை தயாரித்தார். பின்னர் 1945-ம் ஆண்டு ஏ.வி.எம். ஸ்டுடியோஸ் என்ற நிறுவனத்தை தொடங்கினார். இதைத்தொடர்ந்து நாம் இருவர் (1947), அந்த நாள் (1954) என்ற வெற்றிப் படங்களும், 'ஹம பஞ்சி எக் தால் கே' என்ற தேசிய விருது பெற்ற படமும் தயாரிக்கப்பட்டன.

பின்னர் பராசக்தி போன்ற ஹிட் படங்கள் மூலம் சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட நடிகர்களின் படங்களையும் தயாரித்தது ஏ.வி.எம். நிறுவனம். இதனிடையே ஏ.வி.மெய்யப்பன் மறைந்த நிலையில், ஏ.வி.எம். நிறுவனத்தை அவரது மகன் சரவணன் சூர்யா மணி நடத்தினார்.
சரவணன் சூர்யா மணி, நாளடைவில் ஏ.வி.எம். சரவணன் என்று அறியப்பட்டார். இவரது கைகளுக்கு ஏ.வி.எம். நிறுவனம் சென்ற பிறகு, எஜமான், மின்சார கனவு பேரழகன், வேட்டைக்காரன், சிவாஜி, அயன் உள்ளிட்ட பல ஹிட் படங்கள் தயாரிக்கப்பட்டது.
இறுதியாக கடந்த 2014-ம் ஆண்டு வெளியான 'இதுவும் கடந்த போகும்' படம் தயாரிக்கப்பட்டது. தமிழ் திரையுலக ஆளுமைகளில் ஒருவராக கருதப்படும் இவர், இந்தியத் திரைப்படக் கூட்டமைப்பின் தலைவர், அகில உலகத் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் துணைத்தலைவர், தமிழ்நாட்டுச் சுற்றுலா வாரியத்தின் பண்பாட்டுக் கழக இயக்குநர், சென்னை மாநகர செரீப் ஆகிய பொறுப்புகளை வகித்துள்ளார்.

இந்நிறுவனம் 180-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் மட்டுமின்றி, தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பல தொலைக்காட்சி தொடர்களையும் தயாரித்துள்ளது. அதோடு தமிழக அரசின் கலைமாமணி, ராஜா சாண்டோ உள்ளிட்ட விருதுகளை பெற்றுள்ள இவர், முயற்சி திருவினையாக்கும், மனதில் நிற்கும் மனிதர்கள் (4 பாகங்கள்), ஏவிஎம் 60 சினிமா ஆகிய புத்தகங்களை எழுதியுள்ளார்.

இந்த சூழலில் ஏ.வி.எம்.சரவணனின் உடல்நிலை காரணமாக, ஏ.வி.எம். நிறுவனத்தை அவரது மகன் எம்.எஸ். குகன் தற்போது நடத்தி வருகிறார். கடந்த 2 ஆண்டுகளாக நடக்க முடியாமல் இருந்த ஏ.வி.எம்.சரவணன், ஒரு மாதத்திற்கு முன்புதான் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.
இந்த நிலையில் ஏ.வி.எம்.சரவணன் வயது மூப்பின் காரணமாக தனது 86-வது வயதில் காலமானார். ஏ.வி.எம்.சரவணன் மறைவுக்கு திரையுலகினர், திரை ரசிகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மறைந்த ஏ.வி.எம். சரவணனின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வடபழனியில் உள்ள ஏ.வி.எம். ஸ்டுடியோவில் வைக்கப்பட்டுள்ளது.






