உலகம்

தைவானைச் சுற்றி சீனா போர் ஒத்திகை... பதிலடி கொடுக்க படைகளுக்கு உத்தரவிட்ட தைவான் அரசு !

இரண்டாம் உலகப் போரின்போது , சீனாவை ஆண்டு வந்த கோமிங்டாங் கட்சிக்கும் சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இடையே உள்நாட்டு போர் ஏற்பட்டது. இதில் கோமிங்டாங் கட்சியை அமெரிக்கா போன்ற நாடுகள் ஆதரித்த நிலையில், மக்கள் ஆதரவு காரணமாக அந்த போரில் சீன கம்யூனிஸ்ட் கட்சி வெற்றிபெற்றது.

கம்யூனிஸ்டுகளின் இந்த வெற்றியைத் தொடர்ந்து கோமிங்டாங் கட்சியின் தலைவர் சியாங் காய்-ஷேக் தலைமையில் அக்கட்சியின் ஆதரவாளர்கள் சீனாவுக்கு அருகில் இருந்த தைவானுக்கு தப்பிச்சென்றனர். தொடர்ந்து நாங்கள்தான் உண்மையான சீனா என கோமிங்டாங் கட்சியினர் கூறிக்கொள்ள, சீனாவின் 90% நிலத்தை கட்டுப்பாட்டில் வைத்திருந்த சீன கம்யூனிஸ்ட் கட்சியும் நாங்களே உண்மையான சீனா என்று கூறியது.

ஆரம்பத்தில் உலகின் பெரும்பாலான நாடுகள் தைவானை உண்மையான சீனா என அங்கீகரித்த நிலையில், காலால் செல்ல செல்ல சீன கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான சீனாவை அங்கீகரிக்க தொடங்கின. தற்போதைய நிலையில், தைவானை உலகின் 14 நாடுகள் மட்டுமே அங்கீகரித்துள்ளன. அமெரிக்கா கூட இன்னும் தைவானை அங்கீகரிக்கவில்லை.

இந்த சூழலில் தைவானை ஆக்கிரமித்து தனது நாடோடு சேர்க்க ஆரம்பத்தில் இருந்து சீனா முயற்சி செய்து வருகிறது. அதிலும் சமீபத்தில் தைவானை சுற்றி ஏராளமான ராணுவ பயிற்சிகளை சீனா மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தைவானைச் சுற்றியுள்ள கடற்பரப்பில் ஜாயின்ட் ஸ்வார்ட் 2024பி என்ற பெயரில் போர் ஒத்திகையை சீனா தொடங்கியுள்ளதற்கு தைவான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சீனா வெளியிட்டுள்ள அறிக்கையில், 7 கடற்படை போர்க் கப்பல்கள், 25 போர் விமானங்கள் மற்றும் 4 கப்பல்கள் ஆகியவை தைவானை சுற்றி பாதுகாப்பு ஒத்துகையில் ஈடுபட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள தைவான் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”சீனா இந்த பிராந்தியத்தின் பாதுகாப்புச் சூழலை பலவீனப்படுத்துகிறது. சீனாவின் செயல் சர்வதேச விதிகளுக்கு அச்சுறுத்தலாக உள்ளது.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், சீன ஏவுகணைகளின் நகர்வை உன்னிப்பாக கண்காணிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. அதோடு, அனைத்து படைப் பிரிவுகளும் தயார் நிலையில் இருக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.