உலகம்
அமெரிக்காவில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் அதிகரித்த வெப்பம் : உருகிய ஆபிரகாம் லிங்கனின் மெழுகுச்சிலை !
சமீப காலமாக பருவநிலை மாற்றம் உலக அளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக குளிர் பிரதேசங்களாக அறியப்படும் ஐரோப்பிய நாடுகளில் கடந்த ஆண்டு கடும் வெப்ப அலை வீசியது.இங்கிலாந்து, ஸ்பெயின் ஆகிய நாடுகளில் கடந்த ஆண்டு 40 முதல் 45 டிகிரி வரை வெப்பம் பதிவானதால் அங்குள்ள மக்கள் கடும் துன்பத்தை அனுபவித்தனர்.
பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் சில நாடுகளில் பெருமழை பெய்து கடும் சேதம் ஏற்பட்டுள்ளது.அதே நேரம் பல நாடுகளில் போதிய மழை இல்லாமல் கடும் வறட்சி நிலவி வருகிறது. குறிப்பாக ஆப்ரிக்க நாடுகளில் கடந்த சில ஆண்டுகளாக போதிய மழை பொழியாத சூழலில் இந்தாண்டு கடும் வறட்சி நிலவி வருகிறது.
அந்த வகையில் அமெரிக்க முன்னாள் அதிபர் ஆபிரகாம் லிங்கனின் மெழுகுச்சிலை அதிகரித்த வெப்பத்தினால் உருகியுள்ளது தற்போது பரபரப்பாக மாறியுள்ளது. வாஷிங்டனில் உள்ள கேரிசன் தொடக்கப் பள்ளி வளாகத்தில் அமெரிக்க உள்நாட்டு போரின் விளைவுகளை குறிக்கும் வகையில் அமெரிக்க முன்னாள் அதிபர் ஆபிரகாம் லிங்கனின் மெழுகுச்சிலை அமைக்கப்பட்டிருந்தது.
இந்த பகுதியில் கடந்த சில நாட்களாக 100 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெப்பம் பதிவாகியுள்ளது. பொதுவாக குளிர்ந்த வானிலை நிலவும் வாஷிங்டன் பகுதியில் ஏற்பட்ட இந்த அதீத வெப்பத்தால் பொதுமக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகினர்.
இந்த வெப்பத்தால் தொடக்கப் பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த முன்னாள் அமெரிக்க அதிபர் ஆபிரகாம் லிங்கனின் மெழுகுச்சிலை உருகியுள்ளது. தற்போதைய நிலையில் மெழுகு சிலை உருகியதால் ஆபிரகாம் லிங்கனின் தலை தனியே வந்துள்ளது, மேலும் கால்கள் மற்றும் உடலும் தொடர்ந்து உருகி வருவதால் சிலை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக அந்த சிலையை சரிசெய்யும் பணிகள் விரைவில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரம் காலநிலை மாற்றத்தின் அறிகுறிகளாக இந்த நிகழ்வுகள் இருப்பதாக பலரும் தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Also Read
-
”மாற்றுத்திறனாளிகளின் ஒளிமயமான வாழ்வுக்கு நாம் அனைவரும் பாடுபடுவோம்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
“நலம் காக்கும் ஸ்டாலின்” திட்டம் : தமிழ்நாடு முழுவதும் 9,86,732 பேர் பயன்!
-
கனமழையில் இருந்தும் உள்ளூர் மக்களை மட்டுமல்ல; கடல் கடந்து சென்றவர்களையும் காத்த தமிழ்நாடு அரசு : முரசொலி!
-
டிட்வா புயல் : சென்னை கட்டுபாட்டு மையம், புரசைவாக்கத்தில் துணை முதலமைச்சர் ஆய்வு!
-
IT ஊழியர்கள் பணிச்சுமை குறித்த கேள்வி.. ஆய்வுகள் இல்லை என்று சொல்லும் ஒன்றிய அமைச்சர் - சு.வெ. விமர்சனம்!