உலகம்

ஐ.நா பார்வையாளர்கள் மீது தாக்குதல் நடத்திய இஸ்ரேல் ? ஐ.நா கண்டனம் : 33 ஆயிரத்தை தாண்டிய உயிர்பலி !

இஸ்ரேல் -பாலஸ்தீனம் இடையே கடந்த பல ஆண்டுகளாக பிரச்சனை இருந்து வருகிறது. பாலஸ்தீன பகுதியில் இஸ்ரேல் தொடர்ந்து மேற்கொண்டு வந்த குடியேற்றம் மற்றும் அல்- அக்ஸா மசூதி பகுதியில் இஸ்ரேல் மேற்கொண்ட ஆக்கிரமிப்பு போன்றவற்றால் அங்கு பரபரப்பு ஏற்பட்டு வந்தது.

இந்த சூழலில் கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி, இஸ்ரேலின் இந்த நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகளை அனுப்பி தாக்குதல் நடத்தியது. மேலும், இஸ்ரேலின் பல பகுதியில் நுழைந்து ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தினர்.இதில் நூற்றுக்கணக்கான இஸ்ரேல் குடிமக்கள் மற்றும் வெளிநாட்டினர் கொல்லப்பட்டனர்.

அதோடு ஏராளமானோரை ஹமாஸ் அமைப்பு பணயக்கைதிகளாக பிடித்து வைத்தது.ஹமாஸ் அமைப்பின் இந்த நடவடிக்கைக்கு பதிலடியாக இஸ்ரேல் ராணுவம் காசா பகுதியில் விமானங்கள் மூலமும், ஏவுகணைகளை அனுப்பியும் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.இந்த தாக்குதல் இதுவரை 33 ஆயிரத்துக்கும் அதிகமான அப்பாவி பாலஸ்தீன குடிமக்கள் உயிரிழந்துள்ளதாக ஹமாஸ் அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ள காசா சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து கடந்த சில காசா பகுதியில் கடைக்கோடி பகுதியில் இருக்கும் ரஃபா நகரில் இஸ்ரேல் படைகள் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனிடையே இஸ்ரேலின் இந்த தாக்குதலை கண்டித்து ஐ.நா-வில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், ரஃபா நகர் மீதான தாக்குதலுக்கு அமெரிக்காவும் கடும் கண்டனம் தெரிவித்தது.

இந்த நிலையில், ஐ.நா வாகனம் மீது இஸ்ரேல் குண்டுவீசி தாக்குதல் நடத்தியதாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேல் லெபனானில் செயல்படும் ஹிஸ்புல்லா அமைப்பின் மீதும் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனை கண்காணிக்க அங்கு ஐ.நா பார்வையாளர்களை ஏற்றுக்கொண்டு வாகனம் ஒன்று சென்றுள்ளது/

இந்த வாகனத்தின் மீது திடீர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. நாவின் பார்வையாளர்களை குறி வைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று ஐ.நா சார்பில் கூறப்பட்டுள்ளது. ஆனால், இந்த தாக்குதலை நாங்கள் நடத்தவில்லை என இஸ்ரேல் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தாக்குதலுக்குள்ளான ஐ.நா பார்வையாளர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Also Read: “தமிழ்நாட்டின் விரோதியும் துரோகியும் தனித்தனியாக நிற்கிறார்கள்” : செல்வப்பெருந்தகை கடும் விமர்சனம்!