உலகம்

Periods வலியால் துடித்த இளம்பெண்.. மாத்திரை எடுத்துக்கொண்டதால் நேர்ந்த விபரீதம்.. கதறும் குடும்பத்தினர் !

பொதுவாக பெண்கள் பருவ வயதை அடைந்ததும் மாதவிடாய் ஏற்படுவது வழக்கம். இந்த நேரத்தில் பெண்கள் பெரும் வலியால் அவதிக்குள்ளாவர். சுமார் 3 நாட்கள் தொடங்கி சிலருக்கு 7 - 8 நாட்கள் வரை நீடிக்கும். இந்த மாதவிடாய் காலத்தில் பெண்கள் பலமடங்கு வலிகளை அனுபவிப்பதாக சிலர் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இவ்வாறு பெண்கள் அனுபவிக்கும் வலிகளுக்கு சிலர் தங்கள் வீடுகளில் கஷாயம், வெந்தயம் உள்ளிட்டவற்றை வைத்தியம் பார்ப்பர். ஆனால் அண்மைக்காலமாக பலரும் இந்த வலிக்காக மாத்திரை போடுவதை வழக்கமாக வைத்துள்ளனர். இந்த மாத்திரை தற்போது வலி நிவாரணமாக அமைகிறதே தவிர, நாளடைவில் பல விளைவுகளை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கிறது. அப்படி ஒரு சம்பவம்தான் தற்போது நிகழ்ந்துள்ளது.

லண்டனில் வசித்து வருபவர் லைலா கான் (16). இளம்பெண்ணான இவர், மாதவிடாய் காலத்தில் வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்த சூழலில் இவர் வலியால் துடிப்பதை கண்ட அவரது நண்பர்கள், இவருக்கு மாத்திரைகளை பரிந்துரை செய்துள்ளனர். அதன்படி இவரும் அதுகுறித்த விழிப்புணர்வு இல்லமால் கருத்தடை மாத்திரையை சாப்பிட்டுள்ளார்.

கடந்த நவம்பர் மாதம் 25-ம் தேதி மாதவிடாய் ஏற்பட்ட நேரத்தில் இந்த மாத்திரையை சாப்பிட்டுள்ளார். இவ்வாறு அவருக்கு வலி ஏற்பட்ட நாட்களில் எல்லாம் தொடர்ந்து மாத்திரையை எடுத்துக்கொண்டதன் விளைவாக தலைவலி ஏற்பட்டுள்ளது. ஆரம்பத்தில் அதனை பெரிதாக எண்ணாத இவருக்கு, 10 நாட்கள் கழித்து டிசம்பர் 5-ம் தேதி தலைவலி மிக அதிகமாக ஏற்பட்டுள்ளது. தலைவலியைத் தொடர்ந்து சில நாட்களிலேயே வாந்தியும் எடுத்துள்ளார்.

இதையடுத்தே அவரது பெற்றோர், அந்த பெண்ணை மருத்துவரிடம் அழைத்து சென்றுள்ளனர். அப்போது அவருக்கு சில மருந்துகளை மட்டும் பரிந்துரைத்து பயப்படுவதற்கு ஒன்றுமில்லை என்று கூறி வீட்டுக்கு அனுப்பி விட்டார். இதையடுத்து மறுநாள் காலை குளிக்க சென்ற அவர் நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை.

இதனால் பயந்துபோன பெற்றோர், கதவை உடைத்து உள்ளே சென்று பார்க்கையில் மயங்கிய நிலையில் இருந்துள்ளார். இதனை கண்டு பதறிப்போன அவர்கள், உடனடியாக மருத்துவமனைக்கு கூட்டி சென்றனர். அங்கே அவருக்கு சிடி ஸ்கேன் எடுத்தத்தில், மூளையில் இரத்த உறைவு இருந்துள்ளது தெரியவந்தது. இதனால் இளம்பெண் லைலாவுக்கு உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அறுவை சிகிச்சை முடிந்த பிறகு சில நாட்களிலேயே டிசம்பர் 13-ம் தேதி உயிரிழந்துள்ளார்.

இவரது இறப்பு அவரது குடும்பத்தினரால் தாங்க முடியாத பேரிழப்பாக இருக்கிறது. மேலும் லைலா அடிக்கடி வாந்தி எடுத்துக்கொண்டிருந்ததால், அவருக்கு மருத்துவர்கள் மாத்திரைகள் கொடுத்ததாகவும் பெற்றோர் தெரிவித்துள்ளனர். அதோடு கருத்தடை மாத்திரையால் தான் விளைவு ஏற்பட்டதாகவும் உறவினர்கள் தெரிவித்தனர். லைலா உயிரிழந்த பிறகு, அவரது உடல் உறுப்புகளை தானமளிக்க அவரின் குடும்பத்தார் முன்வந்துள்ளனர்

இந்த நிகழ்வால் சோகம் ஒரு பக்கம் இருந்தாலும், கனத்த இதயத்துடன் உடல் உறுப்புகளை தானமளிக்க முன்வந்த லைலாவின் பெற்றோருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. கருத்தடை மாத்திரைகளை மருத்துவரின் பரிந்துரையில்லாமல் எப்போதும், யாரும் எடுக்கக்கூடாது என்றும், அவ்வாறு மருத்துவர்கள் பரிந்துரைக்கும், சம்பந்தப்பட்ட அந்தப் பெண்ணின் குடும்பப் பின்னணியில் யாருக்காவது உயர் ரத்த அழுத்தமோ, பக்கவாத பாதிப்போ, ரத்தம் உறைதல் பாதிப்போ இருக்கிறதா என கேட்டறியப்படும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

காரணம், இந்த மாத்திரைக்கு இரத்தத்தை உறையவைக்கும் தன்மை இருப்பதால், குடும்பப் பின்னணியில் யாருக்கேனும் பிரச்னை இருந்தால், இந்த மாத்திரை பரிந்துரை செய்யப்படாது என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

Also Read: 2 குழந்தைகளுடன் தவறி விழுந்த பெண்... இரயில் ஏறும்போது விபரீதம் : உயிர் பிழைத்த அதிசயம் - பகீர் VIDEO !