உலகம்

தவறான கருத்துக்களை நீக்காத கூகுள் : ரூ.421 கோடி அபராதம் விதித்த ரஷ்யா நீதிமன்றம்.. காரணம் என்ன ?

ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர் தற்போது ஒன்றரை வருடத்தை தாண்டியும் தற்போது உக்கிரமான நடந்து வருகிறது. வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலை நடத்துவதால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. உக்ரைன் நாட்டின் ஏராளமான இராணுவ இலக்குகளை ரஷ்யப் படைகள் தாக்கி அழித்துள்ளன.

அதேபோல் உக்ரைன் தங்களைத் தற்காத்துக்கொள்ள, ரஷ்யப் படைகளுக்குப் பதிலடி கொடுத்து வருகிறது. எனினும் உக்ரைனின் மேற்கு பகுதியில் பெரும்பாலான பகுதிகள் ரஷ்ய கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளன. போர் தொடங்கியதிலிருந்து அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவாக ஆயுதங்களை வழங்கி வருகின்றன.

இந்த போர் இத்தனை மாதம் கடந்தும் இவ்வளவும் நாட்கள் தொடர உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் நேட்டோ நாடுகள் அளித்துவரும் பொருளாதார மற்றும் ஆயுத உதவி முக்கிய காரணமாக இருந்து வருகிறது. தற்போது வரை அமெரிக்கா உக்ரைனுக்கு பல பில்லியன் டாலர் அளவுக்கு ஆயுத, பொருளாதார உதவிகளை செய்துள்ளது. மேலும், மேற்கத்திய நிறுவனங்கள் உக்ரைனுக்கு ஆதரவாக இருக்கவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

இந்த நிலையில், ரஷ்யா குறித்து தவறான கருத்துக்களை நீக்காத கூகுள் நிறுவனத்துக்கு ரூ.421 கோடி அபராதம் விதித்து ரஷ்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உக்ரைன் மீதான போரை சிறப்பு ராணுவ நடவடிக்கை என ரஷ்யா கூறி வருகிறது. ஆனால் கூகுள் நிறுவனம் இதனை பயங்கரவாத, ஆதிக்க போராக குறிப்பிட்டுள்ளதாக ரஷ்யா நீதிமன்றம் கூறியுள்ளது.

மேலும், இது போன்ற கருத்துக்களை நீக்க விடுக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு கூகுள் நிறுவனம் சரியாக பதிலளிக்கவில்லை எனவும் நீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியுள்ளது. இதன் காரணமாக கூகுளின் இத்தகைய செயலை ஒருதலைபட்ச பிரசாரம் என கூறி, அந்த நிறுவனத்துக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Also Read: பெயர் குழப்பத்தால் தவறான வீரரை வாங்கிய பஞ்சாப் அணி.. IPL ஏலத்தில் அதிர்ச்சி சம்பவம் - முழு விவரம் என்ன ?