உலகம்

சுற்றுலா பயணிகளுக்கு எச்சரிக்கை: சூட்கேஸ்களை கொண்டு வர தடை.. மீறினால் அபராதம்.. எங்கு, எதனால் தெரியுமா?

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றாக விளங்குவது குரோஷியா. இங்கு தினந்தோறும் 1000-க்கணக்கான வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் சுற்றுலா செல்வது வழக்கம். இங்கு அமைந்திருக்கும் பீச் உள்ளிட்ட பல இடங்கள் சுற்றி பார்க்க அருமையாக இருக்கும். இங்கு இருக்கும் பல நகரங்களுக்கு சுற்றுலா பயணிகள் தங்கள் குடும்பத்தோடும், நண்பர்களோடும் சென்று தங்கள் நாட்களை அருமையாக மாற்றுவர்.

இந்த சூழலில் இங்கிருக்கும் நகரம் ஒன்றுக்கு சுற்றுலா வரும் பயணிகள், தங்களுடன் டிராலி என்று சொல்லப்படும் சக்கரம் அமைந்திருக்கும் சூட்கேஸை எடுத்து வரக்கூடாது என்று புது உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் அதனை மீறுவோருக்கு அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது, குரோஷியாவில் அமைந்திருக்கும் டுப்ரோவ்னிக் (Dubrovnik) என்ற நகரத்திற்கு சுற்றுலா செல்லும் பயணிகள், தங்களுடன் இனி சூட்கேஸ்களை எடுத்து வரக்கூடாது என்று, அந்த நகரத்தின் மேயர் மாட்டோ ஃபிராங்கோவிக் (Mato Frankovic) உத்தரவிட்டுள்ளார். காரணம் சுற்றுலா வரும் பயணிகள் தாங்கள் இருக்கும் பகுதிக்கு செல்லும்போது, சாலைகளில், தெருக்களில் தாங்கள் கொண்டு வந்த சூட்கேஸ்களை இழுத்து செல்வர்.

அவ்வாறு இழுத்து செல்லும்போது அதன் சக்கரத்தின் சத்தத்தால் ஒலி மாசுபாடு ஏற்படுவதாகவும், மேலும் தூக்கத்தில் இருக்கும் பொதுமக்களின் தூக்கம் பாதிக்கப்படுவதாக நீண்ட நாட்கள் புகார் வந்ததாலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவற்றை பின்பற்றாத சுற்றுலா பயணிகளுக்கு $288 டாலர் (இந்திய மதிப்பில் ரூ. 23,643) அபராதம் விதிக்கப்படும் எனவும் மேயர் எச்சரித்துள்ளார்.

அதுமட்டுமின்றி சுற்றுலாவுக்கு வரும் பயணிகளின் சூட்கேஸ்கள் நகரத்திற்கு வெளியே பறிமுதல் செய்யப்பட்டு, பின்னர் அதனை அவர்கள் சொல்லு இடத்திற்கு கொரியர் மூலம் அனுப்பி வைக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். இந்த விதிமுறைகள் வரும் நவம்பர் மாதம் முதல் அமல்படுத்தப்படவுள்ளது. இதனால் அங்கே செல்லும் சுற்றுலா பயணிகள் மிகவும் அதிருப்தியில் உள்ளனர்.

Also Read: நள்ளிரவில் திடீரென கட்டுப்பாட்டை இழந்த லாரி-பேருந்து மீது மோதியதால் கோர விபத்து: 48 பேர் உடல் நசுங்கி பலி