உலகம்

பிரிட்டனின் புது மன்னருக்கு பிரிட்டன் மக்களே எதிர்ப்பு.. ஊர்வலத்தில் கோஷமெழுப்பிய எதிர்ப்பாளர்கள் கைது !

உலக அளவில் பிரபலமான அரச குடும்பம் என்றால் அது பிரிட்டன் அரச குடும்பம்தான். இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளை காலனியாதிக்கம் செய்துவந்த அந்த பேரரசு சூரியன் மறையாத நாடு என்னும் பெயரை பெற்றது. அண்ட் அளவு உலகம் முழுவதும் பல்வேறு இடங்களில் பிரிட்டனுக்கு காலணிகள் இருந்தது.

20ம் நூற்றாண்டின் இறுதியில் அதன் கட்டுப்பாட்டில் இருந்த பல்வேறு நாடுகள் தனி நாடுகளாக பிரிந்தாலும் அதில் பல்வேறு நாடுகளுக்கு மன்னராக பிரிட்டன் மன்னரே இருந்து வருகிறார். பிரிட்டன் ராணியாக இருந்த எலிசபெத் சில மாதங்களுக்கு முன்னர் மரணடைந்தார். அதைத் தொடர்ந்து அவரது மகன் சார்லஸ் பிரிட்டனின் அடுத்த மன்னராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

முன்னதாக பிரிட்டிஷ் மகாராணி எலிசபெத்தின் இறுதி சடங்கின்போதே அரச குடும்பத்தை எதிர்த்து சிலர் போராட்டத்திலும் ஈடுபட்டு முழக்கங்களை எழுப்பினர். பிரிட்டிஷ் முடியாட்சிக்கு எதிராக குரல் எழுப்பியவர்கள் கையில் "என் அரசனில்லை" (புதிய அரசர் சார்லசை ஏற்கமறுத்து) என்ற பதாகைகளையும் வைத்திருந்தனர்.

இப்படி போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தது பிரிட்டனில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மேலும் ட்விட்டரில் #NotMyKing என்ற ஹாஷ்டாக ட்ரெண்டாகியது. அதில் பதிவிடும் பெரும்பாலான மக்கள் பிரிட்டனை முடியாட்சியில் இருந்து குடியாட்சியாக மாற்றவேண்டும் என்று வலியுறுத்தினர்.

இந்த நிலையில், நேற்று பிரிட்டன் மன்னராக சார்லஸ் முடிசூடினார். அவருக்கு பிரமாண்டமான முறையில் பதவியேற்பு விழா நடைபெற்றது. இதில் பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர். அதேநேரம் சார்லஸுக்கு பிரிட்டன் மக்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மன்னரின் முடிசூட்டுவிழா நடக்கும்போது நடந்த ஊர்வலத்தில் பங்கேற்ற எதிர்ப்பாளர்கள் தங்கள் கரங்களில்) Not My King) என்ற பதாகைகளை ஏந்திக் கொண்டு, மன்னராட்சிக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர்

முன்னதாக ஊர்வலத்தில் மன்னருக்கு எதிராக எதிர்ப்பு எழும் என்ற காரணத்தால் எதிர்ப்பாளர்கள் முன்னதாகவே தடுத்து வைக்கப்பட்டனர். மேலும் இந்த போராட்டத்தில் பங்கேற்ற 51 பேர் போராட்டத்தின் போதே போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் பிரிட்டனில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: தெலுங்கானா: சிறுவனுக்கு புருவத்தில் ஏற்பட்ட காயம்.. தையலுக்கு பதில் பெவிகுயிக் போட்டு ஒட்டிய மருத்துவமனை!