உலகம்

எலான் மஸ்க்கை மதிக்காத பிரபலங்கள்.. வேறுவழியின்றி பல்டியடித்த ட்விட்டர்.. ஆனாலும் ஒரு நிபந்தனை !

உலகின் பிரபலமான சமூக வலைத்தளமான ட்விட்டரை உலகின் முதல் பணக்காரரான எலான் மஸ்க் முழுமையாகக் கைப்பற்றப் போவதாகக் கூறப்பட்டு வந்த நிலையில், பல்வேறு சர்ச்சைகளுக்கு இடையே ஒருவழியாக ட்விட்டர் நிறுவனத்தின் உரிமையாளராக எலான் மஸ்க் ஆகியுள்ளார்.

ட்விட்டர் நிறுவனத்தின் உரிமையாளரான கையோடு ட்விட்டரில் தலைமை நிதி அதிகாரி நெட் சேகல், CEO பராக் அகர்வால் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பலரையும் அடுத்தடுத்து பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.மேலும் கிட்டத்தட்ட 50 % ட்விட்டர் ஊழியர்களுக்கு பணிநீக்க செய்தி அனுப்பப்பட்டுள்ளது. எலான் மஸ்க்கின் இந்த செயலுக்கு பல்வேறு தரப்பினர் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.

இதனிடையே ட்விட்டரை கைப்பற்றிய கையோடு இனி ட்விட்டரில் 'ப்ளூடிக்' பெற மாதம் இந்திய மதிப்பில் ரூ.719 சந்தா கட்ட வேண்டும் என எலான் மஸ்க் அறிவித்தார். அவரின் இந்த அறிவிப்புக்கும் எதிர்ப்பு எழுந்தது. ஆனாலும் தனது முடிவில் எலான் மஸ்க் பின்வாங்காமல் இருந்தார். தற்போதைய நிலையில், இந்த கட்டணவிதிப்பு அமல் படுத்தப்பட்டுள்ள நிலையில், பலரும் அதற்கான தொகையை செலுத்திவருகின்றனர்.

இதுதவிர ப்ளூடிக் முறையிலும் எலான் மஸ்க் மாற்றத்தை கொண்டுவந்துள்ளார். அதன்படி தனிநபர், தனியார் அமைப்புகளுக்கு ப்ளூ டிக், அரசியல் பிரமுகர்கள், அரசு சார்ந்த அமைப்புகளுக்கு சாம்பல் நிற டிக், தொழில் சார்ந்த நிறுவனங்களின் கணக்குகளுக்கு மஞ்சள் டிக் என அறிமுகப்படுத்தியுள்ளார்.

ஆனால், எலான் மஸ்க் கொண்டுவந்த இந்த மாதசந்தா முறைக்கு பல்வேறு பிரபலங்களை எதிர்ப்பு தெரிவித்து தாங்கள் சந்தா செலுத்துவது இல்லை என அறிவித்தனர். இதனையடுத்து அவர்களை மிரட்டும் வகையில் அவர்களின் கணக்குகளுக்கு வழங்கப்பட்ட ப்ளூடிக்கை எலான் மஸ்க் நிறுத்தினார். எனினும் பிரபலங்கள் தங்கள் முடிவில் உறுதியாக இருந்தனர்.

இதனிடையே அனைத்து பிரபலங்களுக்கும் மீண்டும் ப்ளூ டிக் வழங்கப்பட்டுள்ளது. அதுவும் கட்டணம் செலுத்திய பிரபலங்கள் கட்டணம் செலுத்தாத பிரபலங்கள் என்று இல்லாமல் அனைத்து பிரபலங்களுக்கு ப்ளூ டிக் வழங்கப்பட்டுள்ளது. அதாவது குறைந்தது 10 லட்சம் பின்தொடர்பவர்களைக் கொண்ட பிரபலங்களுக்கு மீண்டும் ப்ளூ டிக் வழங்கப்பட்டுள்ளதாக ட்விட்டர் நிறுவனத்தின் சில அதிகாரிகள் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளனர்.

Also Read: பாஜக MP என்றால் FIR கிடையாதா ? -பாலியல் புகாரில் மீண்டும் போராட்டத்தில் குதித்த மல்யுத்த வீராங்கனைகள்!