உலகம்

டிரம்ப்பை தெருவில் இழுத்துச்சென்ற போலிஸார்.. இணையத்தில் பரவும் புகைப்படம்.. உண்மை நிலை என்ன ?

கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளராக களமிறங்கிய டொனால்ட் டிரம்ப் தன்னை எதிர்த்து போட்டியிட்ட ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனை வீழ்த்தி அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றார்.

தான் அதிபராக இருந்த 4 ஆண்டு காலத்தில் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய டிரம்ப் 2020-ம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலிலும் குடியரசுக் கட்சி வேட்பாளராக இரண்டாவது முறையாக போட்டியிட்டார். ஆனால் அவர் ஜனநாயக கட்சி வேட்பாளராக போட்டியிட்ட ஜோ பைடனிடம் தோல்வியைத் தழுவினார்.

அதன்பின்னர் அரசு ஆவணங்களை எடுத்துக்கொண்டதாக டிரம்ப் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில், தற்போது ஆபாச நடிகையோடு தொடர்பில் இருந்ததாகவும் தன் மீதான குற்றச்சாட்டை மறைக்க நடிகைக்கு பணம் கொடுத்ததாகவும் அவர் மீது புகார் எழுந்துள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த ஆபாசப்பட நடிகையான ஸ்டோர்மி டேனியல் டொனால்ட் டிரம்ப் கடந்த 2006-ம் ஆண்டு தன்னுடன் நெருக்கமாக இருந்ததாக குற்றச்சாட்டை கடந்த 2016-ம் ஆண்டு சுமத்தினார். மேலும், தனது அனுமதி இல்லாமல் அவர் என்னிடம் தவறாக நடந்தார் என்றும் அவர் கூறியிருந்தார்.

டொனால்ட் டிரம்ப் கடந்த 2016-ம் ஆண்டு அதிபர் தேர்தலில் போட்டியிட்ட நிலையில் இது சர்ச்சையை ஏற்படுத்தியது இதன் காரணமாக இந்த விவகாரம் குறித்து பேசாமலிருக்க ஸ்டோர்மி டேனியேலுக்கு 30 லட்சம் அமெரிக்க டாலர்களை சட்டத்துக்கு புறமாக கொடுத்ததாக புகார் எழுந்துள்ளது.

இந்த வழக்கில் அவர் கைது செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், போராட்டத்துக்கு தயாராகுங்கள் என தனது ஆதரவாளர்களை அவர் அழைத்து சர்ச்சையை பெரியதாக்கியது.இந்த நிலையில், அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப் கைதாகக் கூடும் என்பதால் அந்நாட்டின் முக்கிய நகரங்களில் போலீசார் பாதுகாப்பை அதிகரித்துள்ளனர்.

இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக டிரம்ப்பை போலிஸார் கைது செய்து தெருவில் இழுத்துச்செல்வதைப் போலவும், டிரம்ப் போலிஸாருடன் சண்டை செய்வதைப்போலவும் புகைப்படம் வெளியாகி பரவி வருகிறது. பலரும் இந்த புகைப்படத்தை பகிர்ந்து டிரம்ப் கைதுசெய்யப்பட்டதாக கூறியிருந்தனர்.

ஆனால், தற்போது அந்த புகைப்படம் போலியானது என்றும், செயற்கை நுண்ணறிவு (AI ) மூலம் இந்த புகைப்படம் உருவாக்கப்பட்டுள்ளதும் தெரியவந்தது. இந்த புகைப்படத்தை சில முக்கிய நபர்களும் பகிர்ந்ததால் இது அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த புகைப்படம் உண்மையான நிகழ்வை போல இருப்பதால் இந்த அளவு பரவியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: அமெரிக்க வங்கிகளைத் தொடர்ந்து திவால் நிலையில் சுவிஸ் வங்கி.. சிக்கலில் தவிக்கும் ஐரோப்பிய நாடுகள் !