உலகம்

மாற்றுத்திறனாளி குறித்து அவதூறு பேச்சு.. பகிரங்க மன்னிப்பு கோரிய எலான் மாஸ்க்.. நடந்தது என்ன ?

உலகின் பிரபலமான சமூக வலைத்தளமான ட்விட்டரை உலகின் முதல் பணக்காரரான எலான் மஸ்க் முழுமையாகக் கைப்பற்றப் போவதாகக் கூறப்பட்டு வந்த நிலையில், பல்வேறு சர்ச்சைகளுக்கு இடையே ஒருவழியாக ட்விட்டர் நிறுவனத்தின் உரிமையாளராக எலான் மஸ்க் ஆகியுள்ளார்.

ட்விட்டர் நிறுவனத்தின் உரிமையாளரான கையோடு ட்விட்டரில் தலைமை நிதி அதிகாரி நெட் சேகல், CEO பராக் அகர்வால், சட்டத்துறைத் தலைவர் விஜயா கட்டே, பொது ஆலோசகர் சீன் எட்கல் என உயர் அதிகாரிகள் பலரையும் அடுத்தடுத்து பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.மேலும் அதில் பணியாற்றும் ஊழியர்கள் பலருக்கு பணிநீக்கம் செய்யப்பட்டதற்கான மெயில் அனுப்பப்பட்டுள்ளது.

கிட்டத்தட்ட 50 % ட்விட்டர் ஊழியர்களுக்கு பணிநீக்க செய்தி அனுப்பப்பட்ட நிலையில், எலான் மஸ்க்கின் இந்த செயலுக்கு பல்வேறு தரப்பினர் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.அதைத் தொடர்ந்து ட்விட்டர் ஊழியர்களை நேரடியாக சந்தித்த எலான் மஸ்க், வாரத்திற்கு 80 மணி நேரம் வேலை பார்க்க வேண்டும் என்றும், முன்புபோல அலுவலகத்தில் இலவசமாக உணவு போன்ற எந்த ஒரு சலுகையும் வழங்கப்படாது என்று கூறியுள்ளதாகவும் தகவல் வெளியானது.

இந்த நிலையில், தற்போது மாற்றுத்திறனாளி ஊழியரை பற்றி அவதூறாகப்பேசி அது சர்ச்சையான நிலையில், தனது செயலுக்கு எலான் மஸ்க் மன்னிப்பு கேட்டுள்ளார். ட்விட்டர் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் ஹல்லி என்ற மாற்றுத்திறனாளி ஊழியரொருவர் தான் பணியில் நீடிக்கிறேனா இல்லையா என்பதை தெளிவுபடுத்துமாறு எலான் மாஸ்க்கின் ட்விட்டர் பக்கத்தினை டேக் செய்து கேள்வியெழுப்பியிருந்தார்.

அதற்கு, அவரது மாற்றுத்திறனை சுட்டிக்காட்டி அதன் காரணமாக அவர் பணிசெய்யவில்லை என குறிப்பிட்டிருந்தார். ஒருவரின் குறைபாட்டை முனைவைத்து பேசியிருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. அதனைத் தொடர்ந்து எலான் மாஸ்க்கை பலரும் விமர்சித்திருந்தனர்.

அதனைத் தொடர்ந்து தான் செய்த தவறுக்கு பகிரங்கமாக எலான் மாஸ்க் மன்னிப்பு கோரியுள்ளார். அவரின் நிலைமையை நான் தவறாகப்புரிந்து கொண்டதற்காக நான் அவரிடம் மன்னிப்புக்கேட்க விரும்புகிறேன். அவர் ட்விட்டரில் தொடர்ந்து நீடிப்பது குறித்து ஆலோசித்து வருகிறேன் என கூறியுள்ளார்.

Also Read: ஹோட்டல் அறையில் வயாகரா எடுத்துக்கொண்ட தொழிலதிபர்.. அதன்பின்னர் செய்த தவறால் பறிபோன உயிர்.. நடந்தது என்ன ?