உலகம்

ஓட்டுநர் இல்லா வாடகை மின்சார கார்கள் அறிமுகம்.. பறக்கும் காரை தொடர்ந்து அடுத்த அறிவிப்பு !

அறிவியல் நாளுக்கு நாள் எப்போதும் வளர்ந்தே வருகிறது. 100 வருடங்களுக்கு முன்னர் ஆகாய விமானங்கள் உலகம் முழுவதும் பிரபலான நிலையில், தற்போது பறக்கும் பைக், கார் வரை உலகம் அதீத அறிவியல் வளர்ச்சியை கண்டுள்ளது.

கடந்த வருடம் உலகின் முதல் பறக்கும் பைக்கை ஜப்பானிய நிறுவனம் ஒன்று அறிமுகப்படுத்தி . டெட்ராய்டில் நடந்த வாகன கண்காட்சியில் பறக்கும் பைக் காட்சிக்கு வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கடந்த அக்டோபர் மாதம் சீன நிறுவனம் வடிவமைத்த அதிநவீன பறக்கும் கார் துபாயில் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.

அதன் வெற்றியைத் தொடர்ந்து 2026-ம் ஆண்டுக்குள் துபாயில் பறக்கும் டாக்ஸிகள் அறிமுகப்படுத்தப்படும் என துபாய் அரசு அறிவித்தது. இந்த வகை பறக்கும் கார், பைக்குகள் அறிமுகபடுத்தும் முன்னரே ஓட்டுநர் இல்லா கார்களை பல்வேறு நிறுவனங்கள் அறிமுகப்படுத்திவிட்டன.

அந்த வகையில் ஜெர்மனியை சேர்ந்த வே என்ற வாடகை கார் நிறுவனம் ஒன்று ஓட்டுநர் இல்லா மின்சார கார்களை அறிமுகப்படுத்தியுள்ளது. நவீன தொழில்நுட்பம் மூலம் கட்டுப்பாட்டு அறையில் இருந்து ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயக்கப்படும் அந்த காரில் பயணிகள் தேவைப்படும் இடத்தில் ஏறி தேவைப்படும் இடத்தில் இறங்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஓட்டுநர் இல்லா கார்களை இயக்கியதாகவும், சொந்தமாக கார் வைத்துக்கொள்ள விரும்பாதவர்களை மனதில் வைத்து இந்த சேவையை அறிமுகப்படுத்தியதாவும், தற்போது சோதனை ஓட்டம் மூலம் சில இடங்களில் மட்டும் இயக்கப்படும் இந்த வகை கார்கள் விரைவில் ஜெர்மனி முழுக்க இயக்கப்படும் என்றும் அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

இது தவிர வாடிக்கையாளர்களை கவர ஸ்பெயினில் இருந்து ஓட்டுநர் இல்லா மின்சார கார் ஒன்று 2311 கிலோ மீட்டர் பயணம் செய்து ஜெர்மன் தலைநகர் பெர்லினுக்கு வந்துள்ளது. இந்த வாடகை கார் சேவை நிச்சயம் பொதுமக்களை ஈர்க்கும் என அந்த நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

Also Read: உ.பி அருகே தேஜஸ் ரயிலில் வெளிநாட்டு பெண்ணிடம் அத்துமீறிய ரயில்வே காவலர்: அதிரடியாக கைது செய்ய அதிகாரிகள்!