உலகம்

துருக்கி நிலநடுக்க இடிபாடுகளில் சிக்கிய குழந்தை.. 5 நாட்களுக்கு பின்னர் மீட்கப்பட்ட ஆச்சரிய சம்பவம் !

மத்திய தரைக்கடல் பகுதியில் ஐரோப்பாவையும், ஆசியாவையும் இணைக்கும் இடத்தில துருக்கி நாடு அமைந்துள்ளது. அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படும் இந்த பகுதியில் கடந்த 6-ம் தேதி அந்நாட்டு நேரப்படி அதிகாலை 4.17 மணிக்கு காசியானதெப் எனும் இடத்தில் ரிக்டர் அளவுகோலில் 7.8 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கத்தில் ஏராளமான கட்டிடங்கள் நொடியில் தரைமட்டமான நிலையில், இடிபாடுகளில் ஏராளமான பொதுமக்கள் சிக்கிக்கொண்டனர். அதிகாலை நேரம் என்பதால் ஏராளமானோர் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த நிலையில் இந்த நிலநடுக்கத்தில் சிக்கிக்கொண்டனர்.பூமிக்கு அடியில் 17.9 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலநடுக்கத்தில் சிக்கி தற்போது வரை 40 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதி துருக்கி - சிரியா எல்லை அருகே அமைந்துள்ளதால் சிரியா நாட்டிலும் ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் லெபனான், சிரியா, ஸைப்ரஸ், இஸ்ரேல் உள்பட்ட நாடுகளில் உணரப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து அதே நாளில் இந்திய நேரப்படி மாலை 3.54 அளவில் 7.5 என்ற ரிக்டர் அளவுகோலில் மீண்டும் அங்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர். மேலும் தற்போது வரை அங்கு சிறிய அளவில் நிலநடுக்கம் தொடர்ந்து கொண்டிருப்பதால் ஏற்கனவே சேதமடைந்த கட்டிடங்கள் இடிந்து விழுந்து வருகிறது.

இந்த நிலையில், துருக்கியின் அன்தாக்யா பகுதியில் ஒரு 2 மாத குழந்தை சுமார் 128 மணிநேரத்திற்குப் பின் உயிருடன் மீட்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடும் குளிரில் இடிபாடுகளுடன் சிக்கி கிடந்த இந்த குழந்தை உயிருடன் மீட்கப்பட்டதும் கதகதப்பான கம்பளியில் வைத்து மருத்துவமனைக்கு கொண்டு சேர்க்கப்பட்டது.

அங்கு குழந்தைக்கு முதலுதவி அளிக்கப்பட்டு உணவும் வழங்கப்பட்டது. அதன்பின்னர் அந்த குழந்தை அழகாக சிரித்து விளையாடும் வீடியோ தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த குழந்தைக்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

Also Read: இந்திய ஊடகத்தை தொடர்ந்து மேற்கத்திய ஊடகத்துக்கும் பூட்டுபோட முயற்சி -மோடியை விமர்சித்த காங்கிரஸ் !