உலகம்

தொடரும் பொருளாதார நெருக்கடி.. அமெரிக்க டாலருக்கு பதில் இந்திய ரூபாயை பயன்படுத்த இலங்கை திட்டம் !

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் வரலாறு காணாத வகையில், விலை வாசிகள் உயர்ந்தது. மேலும் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிவாயு பொருட்களுக்கும் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து சுமார் இரண்டு மாதங்களுக்கு மேலாக இலங்கை மக்கள் பெரும் பொருளாதார நெருக்கடிகளைச் சந்தித்தனர்.

இதனால் கோத்தபய ராஜபச்சே, மஹிந்த ராஜபக்சே ஆகியோர் தங்கள் பதவிகளை விலக வேண்டும் என வலியுறுத்தி ஆவேசத்துடன் இலங்கை மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு ஒரு கட்டத்தில் அதிபர் மாளிகையையும் மக்கள் கைப்பற்றினர்.

இதனை அடுத்து கோத்தபய ராஜபச்சே, மஹிந்த ராஜபக்சே மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என அனைவரும் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்த நிலையில் இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. பின்னர் புதிய அதிபராக ரணில்விக்ரமசிங்க பதவியேற்றுள்ளார்.இருப்பினும் இன்னும் இலங்கையில் இயல்பு நிலை திரும்பவில்லை. மக்கள் ஆங்காங்கே ரணில் விக்ரமசிங்கேவுக்கு எதிராகவும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களை ராணுவத்தைக் கொண்டு அடக்கும் முயற்சிகளும் நடைபெற்று வருகிறது.

தற்போது இலங்கையின் நிலை சற்று முன்னேற்றம் அடைந்துள்ள நிலையில், அதற்கு இந்தியா அந்த நாட்டுக்கு செய்த பொருளாதார உதவி முக்கிய காரணமாக அமைந்தது. உணவு, எரிபொருள் போன்ற முக்கிய பொருள்களை இந்தியா இலங்கைக்கு அனுப்பி அந்நாட்டு மக்களுக்கு உதவியது.

இதுதவிர தமிழ்நாடு அரசு சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு கட்டங்களாக உணவு போன்ற அத்தியாவசிய பொருள்களை இலங்கைக்கு அனுப்பி உதவினார். இந்தியா மற்றும் தமிழ்நாட்டின் இந்த உதவிக்கு இலங்கை மக்கள் நன்றி தெரிவித்த சமூகவலைத்தள பதிவுகள் இணையத்தில் வைரலாகின.

இந்த நிலையில், இலங்கையின் நாணய மதிப்பு இன்னும் உயராத நிலையில், இந்திய ரூபாவை பயன்படுத்தி இந்தியாவுடனான வர்த்தகத்தை விரிவுபடுத்தவுள்ளதாக இலங்கை தெரிவித்துள்ளது. இந்த தகவலை இந்தியாவுக்கான இலங்கை தூதர் மிலிந்த மொரகொட தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பேசிய அவர், இலங்கை நெருக்கடியின் போது இந்தியா பல்வேறு உதவிகளை வழங்கியதாகவும், 3.9 பில்லியன் அமெரிக்க டாலர்களை தமது நாட்டுக்கு வழங்கியதாகவும் அவர் கூறினார்.

மேலும், இந்திய அரசின் செயலியான ரூபே முறையை இலங்கையில் பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆலோசித்து வருவதாகவும், இது சாத்தியமானால் இலங்கைக்கு வரும் இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கு எளிதாக இருக்கும் என்றும் கூறியுள்ளார்.

Also Read: குடிபோதையில் மனைவி மீது தாக்குதல்.. சர்ச்சையில் சிக்கிய முன்னாள் இந்திய வீரர்.. போலிஸார் வழக்குப்பதிவு!