உலகம்

உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் தோல்வி எதிரொலி.. கலவரத்தில் ஈடுபட்ட ரசிகர்கள்.. பிரான்சில் பரபரப்பு !

22-வது உலகக் கோப்பை கால்பந்து தொடர் கத்தாரில் கடந்த மாதம் 20-ஆம் தேதி கோலாகலமாகத் தொடங்கியது. 32 நாடுகள் பங்கேற்ற இந்த கால்பந்து திருவிழாவில் நடப்பு சாம்பியன் பிரான்சும், முன்னாள் சாம்பியன் அர்ஜெண்டினாவும் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன.

உலகக் கோப்பை மகுடம் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் - அர்ஜெண்டினா அணிகள் நேற்றிரவு கத்தாரின் லுசைல் ஐகானிக் மைதானத்தில் மோதின. இந்த ஆட்டத்தில் ஆரம்பத்தில் இருந்து அர்ஜென்டினா அணி அதிரடி ஆட்டம் ஆடியது.

அதன்பலமாக 23வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பில் மெஸ்ஸி கோல் அடித்து அசத்த, அதனை அடுத்து 36-வது நிமிடத்தில் டி மரியா கோல் அடித்தார். ஆட்டத்தின் முதல் பாதியில் 2-0 என அர்ஜென்டினா அணி முன்னிலையில் இருந்த நிலையில், இரண்டாம் பாதி ஆட்டம் தொடங்கியது.

முதல் 70 நிமிடம் ஆடுவது பிரான்ஸ் அணிதானா என்ற கேள்வி எழும் வகையில் அந்த அணி மிகமோசமாக ஆடியது. அர்ஜென்டினாவில் அதிரடிக்கு முன்னர் பிரான்ஸ் அணியால் நிற்கவே முடியவில்லை. ஆனால், அதன்பின்னர் இறுதி சில நிமிடங்களில் அடுத்தடுத்து 2 கோள்களை அடித்து பிரான்ஸ் அணி அதிர்ச்சியளித்தது.

90 நிமிட ஆட்ட நேர முடிவில் இரண்டு அணிகளும் 2-2 கோல் கணக்கில் சம நிலையில் இருந்ததை அடுத்து, போட்டி கூடுதல் நேர ஆட்டத்திற்கு சென்றது. அதில் இரண்டு அணிகளும் தலா ஒரு கோல் அடித்த நிலையில், போட்டி பெனால்டி கிக் முறைக்கு சென்றது. இதில் பிரான்ஸ் அணியை 4-2 என்ற கணக்கில் அர்ஜென்டினா அணி வென்றது.

இந்த உலகக்கோப்பையில் பிரான்ஸ் அணியின் தோல்வியைத் தொடர்ந்து அந்நாட்டின் மிகப்பெரிய கலவரம் ஏற்பட்டுள்ளதால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக தலைநகர் பாரிஸ், நைஸ், லியொன் போன்ற பெருநகரங்களில் ரசிகர்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். பல்வேறு இடங்களில் கடைகள் உடைக்கப்பட்டு பொதுச்சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டது.

இதன் காரணமாக நாடு முழுவதும் போலிஸார் கலவரத்தை கட்டுப்படுத்த துப்பாக்கி சூடு நடத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் போலிஸார் தடியடி நடத்தியதாகவும், சில இடங்களில் கண்ணீர் புகைக்குண்டுகள் வீசப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது, மேலும், கலவரத்தில் ஈடுபட்ட ஏராளமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Also Read: உலகே கோப்பையை வென்றது போன்ற உணர்வு..கால்பந்தில் கடவுளாக மாறிய மெஸ்ஸி.. மாயாஜாலக்காரன் கடந்து வந்த பாதை !