உலகம்

வாழைப்பழத்தின் மூதாதையர் யார் ? ஒரு காலத்தில் சாப்பிட முடியாததாக இருந்த வாழையை ஆதிமனிதன் வளர்த்தது ஏன் ?

முக்கனிகளான மா,பலா,வாழை இவற்றில் அதிகம் விற்பனையாகும் கனி என்றால் அது வாழைதான். இந்தியா மட்டுமின்றி உலகளவில் அதிகம் விற்பனையாகும் கனிகளில் ஒன்றாகவும் வாழைப்பழம் இருக்கிறது. இந்த நிலையில் அது குறித்த முக்கிய தகவல் ஒன்றை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இப்போது நாம் பார்க்கும் வாழைப்பழங்களில் அதிகம் இருப்பது அதன் சதைபகுதிதான். ஆனால் சுமார் 7000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழைப்பழங்களில் சதை பகுதியே குறைவுதான் என்ற தகவலை ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

வாழைப்பழம் குறித்து நடத்தப்பட்ட ஆய்வில் இந்த தகவல் வெளியாகியுள்ளது. அதாவது 7000 ஆண்டுகளுக்கு முன் வாழைப்பழங்கல் கருப்பு விதைகளால் நிரம்பியிருந்தது என்றும், இதன் காரணமாக உண்ணக்கூடிய கனியாக வாழைப்பழம் இருந்திருக்காது என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. எனினும் அப்போது வாழ்ந்த மக்கள் வாழை மரத்தின் பூக்கள் அல்லது அதன் நிலத்தடி கிழங்குகளை தொடர்ச்சியாக சாப்பிட்டனர் என ஆய்வாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

மேலும், இப்போது பல நூறு வகை வாழைப்பழங்கள் இருந்தாலும் அது எல்லாம் மூசா அக்குமினாட்டா என்று அழைக்கப்படும் ஒரு இனத்தில் இருந்து வந்தது என்றும், பப்புவா நியூ கினியாவில்தான் வளர்க்கப்பட்ட வாழைப்பழங்கள் முதலில் தோன்றியதாகவும் பெரும்பாலான ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

இப்போது நாம் பயன்படுத்தும் வாழைப்பழங்களின் DNA-வில் ஒன்று நியூ கினியாவிலிருந்து வந்ததாகவும், ஒன்று தாய்லாந்து வளைகுடாவிலிருந்து வந்ததாகவும், மூன்றாவது வடக்கு போர்னியோ மற்றும் பிலிப்பைன்ஸுக்கு இடையில் எங்கிருந்தோ வந்ததாகவும் ஆய்வாளர்களின் தரவு முடிவுகள் தெரிவிக்கின்றது.

நவீன வாழைப்பழங்கள் அவற்றின் விதைகளை இழந்து சதைப்பற்றாகவும் இனிப்பாகவும் மாறியது எப்போது என்று குறித்த முடிவுகளுக்கு ஆய்வாளர்களால் வரமுடியவில்லை என்றும் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. எனினும் மக்கள் வாழைமரங்களை தொடர்ச்சியாக வளர்த்த காரணத்தால்தான் அவை இந்த நிலைக்கு வந்திருப்பதாகவும் கருதப்படுகிறது.

Also Read: நூற்றுக்கணக்கானோரை பலிவாங்கிய பால விபத்து.. சம்பவத்தன்று கோலாகலமாக பிறந்தநாள் கொண்டாடிய குஜராத் அமைச்சர்!