உலகம்

பெண் நீதிபதியை மிரட்டிய விவகாரம்.. நேரில் மன்னிப்பு கேட்ட முன்னாள் பிரதமர்.. என்ன நடந்தது ?

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் உதவியாளராக பணிபுரிந்து வந்தவர் ஷாபாஷ் கில். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தேசத் துரோக குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். ஷாபாஷ் கில் கைதை கண்டித்து இஸ்லாமாபாத் பகுதியில் இம்ரான் கான் தலைமையில் போராட்டம் நடைபெற்றது.

இந்த போராட்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய இம்ரான் கான், தற்போது நடக்கும் ஷெபாஸ் ஷெரீப் ஆட்சி அனைவருக்கும் கேடு விளைப்பதாகவும், இந்த ஆட்சியில் அராஜகம் தூக்கி நிறுப்படுவதாகவும் குற்றம்சாட்டினார்.

மேலும் இந்த அராஜகத்திற்கு துணைபோன காவல்துறை அதிகாரிகள், தேர்தல் ஆணைய அதிகாரிகள், அரசியல் எதிரிகள் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப் போவதாக மிரட்டல் விடுத்தார்.

தொடர்ந்து பேசிய அவர், தனது உதவியாளர் ஷாபாஷ் கில்லை, காவல்துறை கேட்டதால் 2 நாளில் காவலில் எடுக்க அனுமதி வழங்கிய பெண் நீதிபதி ஜெபா செளத்ரி மீதும் நடவடிக்கை எடுக்கப் போவதாக கூறினார்.

மேலும் நான் போடும் வழக்குகளை சந்திக்க அந்த நீதிபதி தன்னை தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் இம்ரான் கான் எச்சரிக்கை விடுத்தார். இவரது இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இம்ரான் கான் மீது பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில், தற்போது இம்ரான் கான் இஸ்லாமாபாத்தில் உள்ள கூடுதல் செசன்ஸ் நீதிமன்றத்தில் தமது வழக்கறிஞருடன் நேரில் ஆஜராகி தனது பேச்சுக்கு பகிரங்க மன்னிப்பு கேட்டுள்ளார். இந்த சம்பவம் அங்கு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: 15 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை.. 6 ஆண்டுகளுக்கு பின்னர் தண்டனை பெற்ற ஆட்டோ டிரைவர் !