உலகம்

எலிசபெத் ராணியின் இறுதிச்சடங்கு.. சத்தம் வரக்கூடாது என்பதற்காக விமான நிறுவனத்தின் வித்தியாசமான அறிவிப்பு!

பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் உடல் நலக்குறைவால் சில நாட்களாக மருத்துவர்களின் கண்காணிப்பில் சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில் கடந்த வியாழக்கிழமை அவர் காலமானதாக பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்தது.

அவரின் இறுதி சடங்கு வரும் 19ம் தேதி லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் அபேவில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்வில் உலகத்தலைவர்கள் பலர் பங்கேற்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவரின் மறைவை அடுத்து உலக தலைவர்கள் ராணி எலிசபெத்துக்கு இரங்கல் தெரிவித்தனர்.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் ராணி எலிசபெத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.ராணி எலிசபெத் இறந்ததையடுத்து பிரிட்டன் தேசியக் கொடி அரை கம்பத்தில் பறக்கிறது. மேலும் அந்நாட்டு மக்கள் பக்கிங்காம் அரண்மனை முன்பு குவிந்து வருகின்றனர்.

மேலும், ராணியின் இறுதிச்சடங்குக்கு பல்வேறு நாடுகளின் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. காமன்வெல்த் அமைப்பின் தலைவர்கள் , உலக நாடுகளின் மன்னர்கள், உலக தலைவர்கள் என ஏராளமானோர் இந்த நிகழ்வில் கலந்துகொள்ள உள்ளனர்.

இந்த நிலையில், ராணியின் இறுதி சடங்கு நிகழ்வில் அமைதியை கடைப்பிடிக்கும் விதமாக பிரிட்டிஷ் ஏர்வேஸ் 100 விமானங்களை குறிப்பிட்ட நேரத்திற்கு ரத்து செய்துள்ளது. வழக்கமான விமான இயக்க அட்டவணையில் 15% மாற்றங்களை செய்துள்ள பிரிட்டிஷ் ஏர்வேஸ் காலை 11.40 முதல் மதியம் 12.10 வரை 30 நிமிடங்களுக்கும், ராணியின் உடல் ஊர்வலத்தின்போது மதியம் 1.45 மணிக்கு தொடங்கி 35 நிமிடங்களுக்கும், மாலை மாலை 3.05 மணிக்கு தொடங்கி 1.40 மணி நேரம் வரையும் விமானங்கள் இயங்காது என அறிவித்துள்ளது.

மேலும், இந்த விமானங்களில் முன்பதிவு செய்தவர்கள் வேறு விமானங்களில் பயணித்துகொள்ளலாம் அல்லது பணத்தை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என்றும் அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. இது தவிர ராணி அடக்கம் செய்யப்படும் நாளில் பெரும்பாலான கடைகள் மூடப்பட்டிருக்கும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

Also Read: டிராக்டரை பறிமுதல் செய்த ஊழியர்கள்.. தடுத்து நிறுத்திய கர்ப்பிணி பெண்ணை டிராக்டரை ஏற்றி கொன்ற கொடூரம்!