உலகம்

2 வருடங்களாக வீட்டில் இறந்து கிடந்த பெண்.. வாடகைதாரர் வாடகை வசூலித்த அவலம் !

இங்கிலாந்து நாட்டிலுள்ள லண்டனில் பெக்காம் என்ற பகுதி உள்ளது. இந்த பகுதியில் வாடகை வீட்டில் தனியே வசித்து வந்தவர் ஷீலா செலியோன் (வயது 61). இவர் கடந்த 2019ஆம் ஆண்டு கடைசியாக தனது வாடகை பணத்தை வீட்டின் உரிமையாளரிடம் கொடுத்துள்ளார்.

அதன் பின் 2, 3 மாதங்கள் அவர் வாடகை செலுத்தவில்லை. இருப்பினும் அவர் வசித்து வந்த வீடு வீட்டுவசதி சங்கம் நிர்வகித்து வந்துள்ளதால், அந்த சங்கம், பெண்ணின் சமூக நலன்கள் பிரிவில் விண்ணப்பித்து ஷீலாவின் வாடகையை இரண்டு வருடங்களுக்கு மேலாகப் பெற்று வந்துள்ளனர்.

இதனிடையே கடந்த 2020-ம் ஆண்டு அவரது வீட்டிற்கு சமையல் எரிவாயு இணைப்பை பற்றி சோதனை செய்யவந்த போது, ஷீலா வீட்டின் கதவு பூட்டப்பட்டு எந்தவித பதிலலும் அளிக்காததால் அவர் வீட்டு எரிவாயு இணைப்பும் துண்டிக்கப்பட்டது. இரண்டு வருடங்களாக வாடகை செலுத்தவில்லை, எரிவாயு இணைப்பு துண்டிப்பை பற்றி எந்த வித புகாரும் ஷீலா கொடுக்கவில்லை. இப்படி சந்தேகத்திற்குரிய வகையில் இருந்தாலும், ஒருவரும் உள்ளே சென்று என்ன ஏது என்று பார்க்கவில்லை.

இதையடுத்து நீண்ட மாதங்களுக்கு பிறகு, ஷீலா குறித்து அவரது அண்டைவீட்டுக்காரர்கள் காவல்துறையில் புகாரளித்தனர். அப்போது அவரது வீட்டின் கதவை உடைத்து உள்ளே வந்து பார்த்தபோது, அவரது வீட்டில் இருந்து அழுகிய நிலையில் உடல் எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டது. அதன்பின் அதனை உடற்கூறாய்வு பிரிவுக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து வழக்குப்பதிவு செய்த காவல் அதிகாரிகள், அவர் யார்? எப்படி இறந்தார்? என்று கண்டறிய முனைந்தனர். ஆனால் உடல் நன்றாக அழுகிய நிலையில் இருந்ததால், அவர் இறப்புக்கான காரணம் கண்டறியப்பட முடியவில்லை. மேலும் அதில் இருந்த பற்களை வைத்து இறந்தது ஷீலா என்று உறுதிசெய்யப்பட்டது.

இவர் குறித்து விசாரித்த போது, கடைசியாக 2019-ம் ஆண்டு மருத்துவ சிகிச்சைக்காக முன்பதிவு செய்திருந்த இவர், மறுநாள் சிகிச்சைக்கு செல்லவில்லை என்று தெரியவந்தது. மேலும் அவர் வீட்டிலிருந்த மருந்துகள், பொருட்கள், வாடகை செலுத்திய கடைசி நாள் என்று அனைத்தையும் வைத்து பார்க்கையில் அவர் இரண்டு ஆண்டுகள் முன்பு, அதாவது ஆகஸ்ட் மாதம் 2019-ம் ஆண்டு இறந்திருக்க வேண்டும் என்பது உறுதி செய்யப்பட்டது.

இதனிடையே ஏற்கனவே அவரை காணவில்லை என்று இரண்டு முறை காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. அப்போது விசாரிக்கையில் அவர் வேறு எங்கோ சென்றுள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் வழக்கை முடித்து வைத்தனர்.

இந்த நிலையில் அவரது வீட்டில் அழுகிய நிலையில், அவரது உடல் எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் வாடகைக்கு வசிப்பவர் இறந்தது கூட தெரியாமல் இரண்டு ஆண்டுகளாக வாடகை வசூலித்த வீட்டுவசதி சங்கம் மேல் தனிப்பட்ட விசாரணையும் நடத்தப்பட்டு வருகிறது.